பக்கம் எண் :

பக்கம் எண்:453

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
         
     110    அகத்துநின் றெழுதரு மன்பிற் பின்னிக்
           குளிர்நீர் நெடுங்கடற் கொண்ட வமிழ்தென
           அளிநீர்க் கட்டுரை யயனின் றோர்க்கும்
           உள்ளம் பிணிப்ப வொன்ற வுரைத்தினி
           எள்ளு மாந்த ரெரிவாய்ப் பட்ட
     115    பன்னற் பஞ்சி யன்ன ராகென
           வெகுளித் தீயிற் கிளையறச் சுடுதல்
           முடிந்த திந்நிலை முடிந்தன ரவரெனச்
 
                    (இதுவுமது)
             110 - 117 : அகத்து.........இந்நிலை
 
(பொழிப்புரை) பின்னரும் தன் உள்ளத்தினின்றும் எழா நின்ற கடலின்கண் அன்பிலே பட்டுக்குளிர்ந்த தன்மையையுடைய நெடிய பாற்கடலின்கண் கொண்ட அமிழ்தத்தையொத்த அருட்பண்புடைய பொருள் பொதிந்த மொழிகளைப் பக்கத்தில் நிற்போருடைய நெஞ்சத்தையும் பிணித்துக் கொள்ளும்படி பொருந்தக் கூறி ''இனி, காளையீர்! நம்மை இகழும் நம் பகைமாந்தர் யாவரேயாயினும் தீயிற்பட்ட பன்னிய பஞ்சு போல்வார் ஆகுக'' என்று நமது சினமாகிய நெருப்பின்கண் அப்பகைவரை அவர் தம் சுற்றத்தோடு சுடுவதாய் இந்நிலை நிகழ்ந்தது; இனி அப்பகைவர் அழிந்தே போயினர் காண் என்று உதயணன் கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) குளிர்நீர் - குளிர்ந்த தன்மை. அமிழ்தம் என்றமையால் பாற்கடல் என்க. அளிநீர் - அருட்பண்பு. எள்ளு மாந்தர் - இகழும் பகை மக்கள்; என்றது - ஆருணிமன்னன் முதலியோரை. எரி -  நெருப்பு. பன்னற் பஞ்சி - ஆராய்ந்தெடுத்த பஞ்சு. இந்நிலை - இப்பொழுது நமக்கு உண்டாயிருக்கிற நிலைமை.