பக்கம் எண் :

பக்கம் எண்:455

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
         
     130    அன்னவை கிளந்த பின்னர்த் தன்னோ
           டொன்னாற் கொள்ளு முபாய நாடி
           வருட காரனொ டிடவகற் றழீஇ
           அளப்பருங் கடுந்திற லாருணி யாருயிர்
           கொளப்படு முறைமை கூறுமி னெமக்கென
 
         (உதயணன் அமைச்சர்களுடன் ஆராய்தல்)
            130 - 134 : அன்னவை.........எமக்கென
 
(பொழிப்புரை) இன்னோரன்ன ஆறுதல் மொழிகள் பலவற்றையும் எடுத்துக் கூறிய பின்னர், வருடகாரனையும் இடபகனையும் தனி இடத்தே வைத்து, ''அன்புடையீர்! என்னோடிருந்து நம் பகைவனிடத்திருந்து நம் நாட்டைக் கைப்பற்றிக்கொள்ளும் உபாயத்தை ஆராய்ந்து அளத்தற்கரிய கடிய ஆற்றலுடைய நம் பகைவனாகிய ஆருணியினுடைய கொள்ளுதற்கரிய உயிரையும் கொள்ளுதற்கு ஏற்ற வழிகளையும் எமக்குக் கூறுவீராக'' என்று வேண்டாநிற்ப; என்க.
 
(விளக்கம்) தன்னோடிருந்து நாடி என ஒரு சொல் வருவிக்க.