பக்கம் எண் :

பக்கம் எண்:457

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
            சேவக நிலைஇக் காவ றோறும்
     145     ஆறீ ராயிர மறியப் பட்ட
            வீரரை விடுத்துப் போர்செயப் போக்கித்
            துயிலும் பொழுதிற் றுளங்கக் குப்புற்
            றயிலுறு வெம்படை யழல வீசிக்
            கதுவா யெஃகமொடு கடைமுத றோறும்
     150     பதுவாய்க் காப்புறு படைத்தொழி லிளையரைப்
            பாய லகத்தே சாய நூறி
 
                     (இதுவுமது)
               144 - 151 : சேவகம்.........நூறி
 
(பொழிப்புரை) சேவகத்தொழிலை நிலைநிறுத்தி அவ்வரண்மனை காக்கின்ற காவலிடந்தோறும் நம்முடைய படைகளுள் வைத்துப் பன்னீராயிரம் என்று தொகையிடப்பட்ட மறவர்களை அரண்மனைக்குள் விடுத்துப் போர்செய்யும்படி ஏவாநிற்ப, அம்மறவர் தாம் அரண்மனைக்குள் புகுந்து அம்மன்னனும் பிறரும் தூங்கும் பொழுது அவர்கள் நடுங்கும்படி குதித்துக் கூரிய வெவ்விய படைக் கலங்களை மின்னும்படி வீசிப் பகைவரை வடுப்படுத்தா நின்ற வேலோடு வாயிலிடந்தோறும் நின்று காவல் செய்யும் பதுவாய்க்காவலராகிய படைத்தொழில் மறவரைப் படுக்கையிலேயே வீழ்ந்து கிடக்கும்படி கொன்று குவித்து; என்க.
 
(விளக்கம்) சேவகம் - சேவை. காவல் - காவலிடம். பன்னீராயிரம் வீரர் என்க. அகத்தோர் துளங்க என்க. குப்புற்று - குதித்து. அயில் - கூர்மை. பதுவாய்க்காப்பு: ''எண்பதினாயிர மிளம்பது வாய்களும்'' (137 : 211) என்றார் முன்னும். பாயல் - படுக்கை.