பக்கம் எண் :

பக்கம் எண்:458

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
            மாவும் வேழமு மாமணித் தேரும்
           தானைக் கொட்டிலொ டாணக் காப்பமைத்
           தொன்னார்க் கடந்த வுதயணன் வாழ்கென
     155    இன்னாச் செய்தெம் மெழினகர் வௌவிய
           குடிப்பகை யாள ரடைத்தகத் திராது
           பெண்பாற் பேரணி நீக்கித் திண்பாற்
           போரொடு மொன்றிற் போதுமின் விரைந்தெனக்
           காரொலி முழக்கிற் கடுத்தன மார்ப்பக்
 
                     (இதுவுமது)
             152 - 159 : மாவும்............ஆர்ப்ப
 
(பொழிப்புரை) ஆங்குள்ள குதிரைகளையும் யானைகளையும் சிறந்த மணித்தேர்களையும் படைக்கொட்டிலோடு அரணத்தையுடைய காப்பினையமைத்துத் தன் பகைவரை வென்று கடந்த உதயண மன்னன் வாழ்க என்றும், எமக்குத் துன்பத்தைச் செய்து எம்முடைய அழகிய நகரத்தைக் கைப்பற்றிக்கொண்ட எங்குடிக்குப் பழம்பகையாளராகிய நீவிர் கதவினை யடைத்துக் கொண்டு அரண்மனைக்குள்ளேயே இருந்துவிடாமல் நுங்களுடைய பெண்களின் பெரும்படையை விலக்கித் திண்மையையுடைய போர் செய்தலுக்கு உடன்படுவீராயின் விரைந்து வாருங்கோள்! என்று கூறி முகில் முழங்குமாறுபோலே முழங்கி முடுகி ஆரவாரியாநிற்ப; என்க.
 
(விளக்கம்) தானைக்கொட்டில் - மறவர் உறையுள். ஆணம் - அரணம். குடிப்பகையாளர் - வழிவழிப்பகைவர். பெண்களின் படையை நீக்கி என்றது இகழ்ச்சிக் குறிப்பு. கடுத்தனம் ஆர்ப்ப - முடுகினேமாய் ஆரவாரியாநிற்ப.