பக்கம் எண் :

பக்கம் எண்:461

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
         
     175    விசைப்புள் வெங்குர லிசைப்பக் கேட்ட
            நாகப் பெதும்பையி னடுங்கி யாகத்
            துத்தியுந் தொடரு முத்தொடு புரள
            ஒளிக்கா சொருபாற் றோன்றத் துயிற்பதத்
            தசைந்த வந்துகில் கையகத் தசைய
     180    நெகிழ்ந்த நீரிற் கண்கை யாக
            முகிழ்ந்த முலைமுதன் முற்றத் தியைந்த
            தருப்பை பொற்கொடி யாக விரக்கமொ
            டோருயிர்க் கணவற்கு நீருகுப் பனள்போல்
            முகங்கொள் காரிகை மயங்கல் கூராச்
 
                     (இதுவுமது)
             175 - 184 : விசைப்புள்.........கூரா
 
(பொழிப்புரை) விரைந்து பறக்கும் இயல்புடைய கருடன் வெவ்விய தனது குரலாலே ஆரவாரியாநிற்ப அது கேட்ட நாக கன்னிகை நடுங்குதல் போன்று நடுங்கித் தன்னுடம்பி லணிந்திருந்த உத்தியும், சங்கிலியும் முத்துமாலையோடு புரளாநிற்பவும், ஒருபக்கத்தே ஒளியுடைய மணிமாலை தோன்றாநிற்பவும், துயிலுதலையுடைய காலத்தே தீ நிமித்தமாகத் தன்னிடையிலே உடுத்திய அழகிய ஆடை நெகிழ்ந்து தனதொரு கையினிடத்தே அசையாநிற்பவும், தன் கண்ணே கையாகவும், தன் குவிந்த முலையின் முற்றத்தே பொருந்திய பொற் கொடியே தருப்பையாகவும், அழுகையோடே தன்னொடுயிரொன்றாகிய தன் கணவனுக்கு நெஞ்சம்நெகிழ்ந்து வெளிப்பட்ட தன் கண்ணீரே நீராகவும் உகுப்பவள்போலப் பட்டத்துத் தேவியாகிய அக்காரிகை பெரிதும் மயங்காநிற்ப என்க.
 
(விளக்கம்) விசைப்புள் - கருடன். நாகப் பெதும்பை - நாக கன்னிகை. உத்தி, தொடர், முத்து இவைகள் அணிகலன்கள். காசு - மணி. துயிற்பதம் - உறங்கும் பொழுது. அசைந்த : அசைத்த - கட்டிய. முகிழ்ந்த - குவிந்த. பொற்கொடி - ஓரணிகலன். முகங்கொள் காரிகை - தலைமைத் தன்மை கொண்ட அழகுடைய நங்கை; பட்டத் தேவிக்குப் பின் வருந் தீங்குக்கு நிமித்தமாக இங்ஙனம் அத்தேவி துயிலும்பொழுது நிகழும் என்று வருடகாரன் கூறுகின்றான் என்க.