பக்கம் எண் :

பக்கம் எண்:462

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
         
     185    சீரலங் காரச் சித்திர முடிமிசைத்
            தாரணி கோதை தாழ்ந்துபுறத் தசைய
            உற்றதை யறியா டெற்றென விரங்கி
            ஆவி வெய்துயிர்ப் பளைஇயக முளைவனள்
            தேவி திருமகன் றானை பற்றி
     190    ஆகுலப் பூசலி னஞ்சுவன ளெழவும்
 
                     (இதுவுமது)
             185 - 190 : சீர்.........எழவும்
 
(பொழிப்புரை) சீரிய ஒப்பனையையுடைய சித்திரம் போன்ற தனது முடியின்மேற் சூட்டப்பட்ட தாரும் கோதையும் சரிந்து புறத்தே கிடந்து அசையாநிற்பவும், தனக்கு நிகழுந் தீங்கியாதென அறியாதவளாய் விரைந்து இரக்கமெய்தித் தன்னுயிரை வெய்யவுயிர்ப்போடு கலந்து உள்ளம் வருந்துபவ ளாகிய அத்தேவி ஞெரேலென எழுந்த நம்படைஞருடைய ஆரவாரத்தாலுண்டான துன்பத்தாலே அஞ்சித் தன் கணவன் முன்றானையைப் பற்றியவளாய்ப் பாயலினின்றும் எழா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) தார், கோதை என்பன மலர்மாலை வகை. தெற்றென- விரைவாக. ஆவி - உயிர் : உயிரோடு வெய்துயிர்ப்பை அலைஇ என்க. திருமகன் என்றது, வேந்தனாகிய தன் கணவனை என்றவாறு. ஆகுலப்பூசல் - துன்பந்தரும் ஆரவாரம்.