பக்கம் எண் :

பக்கம் எண்:465

உரை
 
3. மகத காண்டம்
 
24. மேல்வீழ் வலித்தது
 
           இன்னோ ரனையன வின்னா வெய்துற
           ஒன்னா மன்னனை யுயிருடன் பருகுதும்
           இந்நிலை யருளென வெண்ணின னுரைப்ப
           அந்நிலை நோக்கி மன்னனு முவந்து
     215    பொருத்த முடைத்தென வொருப்பா டெய்திப்
           புள்ளு மில்லா வொள்ளொளி யிருக்கையுள்
           மறைபுறப் படாஅச் செறிவின ராகி
           உளைப்பொலி மான்றே ருதயண னோடு
           வலித்தனர் மாதோ வளைத்தனர் கொளவென்.
 
                       (இதுவுமது)
             211 - 219 : இன்னோர்.........கொளவென்
 
(பொழிப்புரை) நம்பகைமன்னனுக்கு இத்தகைய இன்னல்கள் பலவும் உண்டாகவும் யாம் அவ்வாருணி மன்னன் உயிரினைக் குடிப்பேமாக! இதற்குப் பெருமான் உடன்பட்டருளுக! என்று வருடகாரன் ஆராய்ந்து கூறாநிற்ப அவ்வமைச்சன் கூறிய செய்கை முறையினை உதயண மன்னனும் கூர்ந்துணர்ந்து மகிழ்ந்து ''இச்செயன் முறை பெரிதும் பொருத்தமுடையதே'' என்று கூறி அங்ஙனமே செய்தற்கு உடன்பட்டவனாக, இவ்வாறு பறவையும் பயிலுதற்கியலாத தொரு பளிக்கறையினுள்ளிருந்து அமைச்சர்கள் பிடரிமயிராலே பொலிவுடைய குதிரை பூண்ட தேரையுடைய அவ்வுதயணமன்னனோடே ஆராய்ந்து பகையரசன் அரண்மனையை முற்றுகையிடுதற்கு மறைபுறப்படாத அடக்க முடையராயிருந்து துணிவாராயினர் என்க.
 
(விளக்கம்) வருடகாரன் உரைப்ப வென்க. மன்னன் - உதயணன். பறவைகளும் சார்தற்கியலாத ஒள்ளொளி இருக்கை என்க. ஒளியிருக்கை - பளிக்கறை. செறிவினர் - அடக்கமுடையோர். உளை - பிடரிமயிர். வளைத்துக்கொள வலித்தனர் என மாறுக.

                 24. மேல்வீழ் வலித்தது முற்றிற்று.