பக்கம் எண் :

பக்கம் எண்:467

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
         
     5    தாழ்ச்சி யின்றித் தருசகன் றமரோ
          டேழ்ச்சியு மெறிபடை யளவுமெம் பெருமான்
          சூழ்ச்சியுஞ் சூழ்பொருட் டுணிவு மெல்லாம்
          படிவ வொற்றிற் பட்டாங் குணர்ந்து
          கொடியணி வீதிக் கோநகர் வரைப்பிற்
     10    படியணி வாயிலும் பரப்பு நாயிலும்
          அற்றம் பட்டுழித் தெற்றெனத் திருத்திக்
 
                  (ஒற்றர் கூற்று)
              5 - 11 : தாழ்ச்சி.........திருத்தி
 
(பொழிப்புரை) ''பெருமானே ! நம்பகையரசனாகிய ஆருணி வேந்தன், பெருமான் தருசகமன்னன் அமைச்சர் முதலியோரொடு தன்மேற் படையோடு போர்க்கெழுந்ததனையும், நம்முடைய கொல்படையின் அளவையும், பெருமான் சூழ்ச்சியினையும், அச்சூழ்ச்சியின்கண் துணிந்துள்ள செயலையும், பிறவற்றையும் எஞ்சாமல் மாறுவேடங்கொண்ட தன் ஒற்றர்களாலே காலந்தாழ்த்தாமல் நிகழ்ந்தவாறே அறிந்தவனாய்த் தான் அரசு வீற்றிருக்கும் கொடிகளாலே அழகெய்திய தலைநகரமாகிய கோசம்பியின்கண் படிக்கட்டுக்களாலே அழகெய்திய கோபுரவாயிலையும் செண்டு வெளியினையும் ஞாயிலையும் சீர் கெட்டிருந்த இடங்களை விரைந்து சீர்திருத்தி'' என்க.
 
(விளக்கம்) பகைமன்னன் நம் எழுச்சியும் படை அளவும் சூழ்ச்சியும் துணிவும் ஒற்றில் தாழ்ச்சியின்றிப் பட்டாங்குணர்ந்து வாயில் முதலியவற்றை அற்றம் பட்டுழித் திருத்தி என வியைக்க. தருசகன் தமர் - அவனமைச்சரும் படைஞரும். ஏழ்ச்சி - எழுச்சி. துணிவு - ஆராய்ந்து துணிந்த முடிபொருள். படிவம் - மாறுவேடம். கோநகர் - தலைநகர் : கோசம்பி. பரப்பு - செண்டுவெளி. நாயில் - ஞாயில் : போலி. ஞாயிலாவது ஏப்புழைக்கு நடுவாய் எய்து மறையுஞ்சூட்டு. அற்றம் - சீர்க்கேடு. தெற்றென - விரைந்து.