பக்கம் எண் :

பக்கம் எண்:478

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
           ஆனிலைப் படாஅ தீனிலைக் கண்ணே
           பற்றா மன்னர் படையொடு புணரின்
           அற்றப் படீஇய ரதனினு முவத்துமென்
           றின்னவை யெல்லாந் திண்ணிதி னுரைத்தனன்
           தன்னொடு தொடர்ந்த மன்னரைத் தொகுத்துத்
     95    தானிவண் வாரா னாயினும் யானிவட்
           செய்வதை யெல்லா மெய்யெனக் கருதுமென்
           றைய மின்றி யவனுழை விட்டபின்
 
                     (இதுவுமது)
            90 - 97 : ஆனிலை.........விட்டபின்
 
(பொழிப்புரை) ''அந்த நிலையிலே அவன் அழிவுறாமல் இந்த நிலையிலேயே அவனுடைய பகை மன்னர்கள் தம் படையோடு வந்து தாக்குவாராயின் அவ்வுதயணன் சோர்வுற்றழிதல் ஒருதலை. அங்ஙனம் அழியுமிடத்தும் யாம் பெரிதும் மகிழ்வேம்' என்று இம் மொழிகளையெல்லாம் எங்களரசன் என்பால் திண்ணமாகக் கூறினன். என்றும், அம்மன்னவன் தன்னோடு கேண்மையாலே தொடர்ந்த மன்னர்களையும் கூட்டிக் கொண்டு உதயணனுக்குத் துணையாக வந்திலனேயாயினும், யான் இங்குச் செய்யும் செயலையெல்லாம் வாய்மை என்றே கருதுவான் என்று அப்பகைவர் வாயிலாகக் கூறி அவ்வாருணி மன்னன் ஐயமின்றித் தெளியும்படி அவன்பால் இச்செய்தியை விட்டபின்னர்'' என்க.
 
(விளக்கம்) ஆனிலை - அந்தநிலை. ஈனிலை - இந்தநிலை. பற்றா மன்னர் - அவ்வுதயணனுடைய பகை மன்னர். அற்றப்படீஇயர் - சோர்வுபடுவான். அதனினும் - அங்ஙனம் சோர்வு படுதலாலும். அவனுழை - ஆருணியரசனிடத்து. விட்டபின் - செய்திகளை முடித்த பின்பு.