பக்கம் எண் :

பக்கம் எண்:485

உரை
 
3. மகத காண்டம்
 
25. அரசமைச்சு
 
          ஆண முடைத்தாக் கொடுப்பன் மற்றவ்
          வாண்மிகு தானை வத்தவற் கைவிட்
          டென்னொடு கூடி யொருவ னாகப்
    155    பின்னைச் செய்வ பிறவும் பலவென
          அன்னவும் பிறவு மறிந்தவு மல்லவும்
          ஆருணி யுரைத்தவு முரையா தனவும்
          ஆராய் வாள னகமுணக் கிளந்தவன்
          காரியக் கிளவியிற் காரணங் காட்டலின்
 
                    (இதுவுமது)
            152 - 159 : மற்றவ்.........காட்டலின்
 
(பொழிப்புரை) ''நீ அந்த வாட்படைமிக்க சேனையையுடைய அவ்வுதயணனைக் கைவிட்டு என்னோடுகூடி எம்மில் ஒருவனாகக் கடவை. அங்ஙனம் ஆனபின்னர் அம்மன்னன் நினக்குச் செய்யும் சிறப்புக்கள் இவற்றில் வேறாய்ப் பலவாகவும் இருக்கும்'' என்று அவற்றையும் தான் அறிந்த பிறவற்றையும் அவ்வாருணி மன்னன் தன்பாற் கூறி இருப்பனவும், கூறப்படாதனவும், ஆராய்ச்சியுடைய அவ்வருடகாரன் மனத்தைக் கவரும்படி அச்சேனாபதி மகன்கூறி அக்காரிய மொழிகளுக்கெல்லாம் காரணமாகிய மொழிகளையும் எடுத்துக்காட்டா நிற்ப; என்க.
 
(விளக்கம்) ஆள்மிகுதானையுமாம் - எம்மில் ஒருவனாக என்க. பின்னை அம்மன்னவன் செய்வன என்க. ஆருணி பகைவர் துணையைப் பிரித்தற் பொருட்டுத் தான் வழங்குவதாக உரைத்தவும் என்க. ஆராய்வாளன் - ஆராய்ச்சியையுடைய வருடகாரன்.