பக்கம் எண் :

பக்கம் எண்:490

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
          மறைந்தனர் வந்து மாற்றோன் றூதுவர்
          செறிந்த சூழ்ச்சியிற் செய்வது கூறலும்
          உவந்த மனத்த னூன்பாற் படுவளை
          ஒடுங்கிநீ ரிருக்கென வொளித்தனன் வைத்துத்
     5    தார காரியைத் தரீஇ நீசென்
 
                (வருடகாரன் செயல்)
             1 - 5 : மறைந்தனர் ......... தரீஇ
 
(பொழிப்புரை) ஆருணி மன்னன் விடுத்த சகுனி கௌசிகன் முதலிய நால்வரும் தம்மைப் பிறர் காணாதபடி வந்து வருடகாரனைக் கண்டு அத்தூதுவர் அடக்கமுடைய தனது சூழ்ச்சியினாலே செய்வதற்குரிய செயலை வருடகாரனுக்குக் கூறினராக, அவன் அவர் மொழிகேட்டு மகிழ்ந்த மனத்தையுடையவனாய், ''ஐயீர் நீவிர் ஊங்குள்ள இக்குகையினுள் மறைந்திருக்கக்கடவீர்'' என்று கூறி அவர்களை அக்குகையினுள் மறைத்துவைத்து அவர் அறியாமல் தாரகாரி என்னும் அமைச்சனை வரவழைத்து; என்க.
 
(விளக்கம்) மாற்றோன் - ஆருணி. வருடகாரனுக்குக் கூறலும் என்க. ஊன்பால் - உவ்விடத்தே. படுவளை - அமைந்துள்ள குகை. தாரகாரி - தருசகனுடைய அமைச்சன். தரீஇ - தருவித்து; அழைப்பித்து.