பக்கம் எண் :

பக்கம் எண்:497

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           உள்ளுடைக் கடும்பகை யுட்குதக் கன்றென
     35    நள்ளிரு ளகத்தே பொள்ளென வுராஅய்
           இன்கட் பம்பை யெரூஉக்குர லுறீஇ
           இருந்த குரம்பை யெரியுண வெடுப்பிக்
           கருவியு முரிமையுங் காப்புறத் தழீஇ
           அருவி மாமலை யரணென வடைதலின்
 
                  (உதயணன் செயல்)
          34 - 39 : உள்ளுடை ......... அடைதலின்
 
(பொழிப்புரை) பின்னர் உதயணன் தன் படை மறவர்களைப் பார்த்து, ''மறவீர்! புறப்பகையினுங் காட்டில் உட்பகையே ஒருவனுக்குக் கடும் பகையாம். அப்பகை அஞ்சத் தக்கதே'' என்று அனைவரும் உணரக் கூறி நள்ளிரவிலே ஞெரேலென்று சென்று இனிய ஓசையுடைய பம்பையை முழக்கி ஓசையுண்டாக்கித் தாங்கள் தங்கியிருந்த குடிசைகளைத் தீயுண்ணும்படி கொளுத்திவிட்டுத் தம்முடைய படைக்கலன்களோடு, பரிவாரங்களையும் பாதுகாப்போடு அழைத்துக் கொண்டு அவ்விடத்தினின்றும் சென்று அருவியையுடைய பெரிய மலையாகிய 'தவசி சயந்தம்' என்னும் மலையைத் தமக்கு அரணாகக் கொண்டு எய்தாநிற்றலால்; என்க.
 
(விளக்கம்) உள்ளுடைக் கடும்பகை - உட்பகை. உட்கு தக்கன்று - அஞ்சத் தகுந்தது. எரூஉக்குரல் - தாக்குதலால் உண்டாகும் ஒலி. குரம்பை - குடிசை. எரி - நெருப்பு. எடுப்பி - வளர்த்து. கருவி - படைக்கலம். உரிமை - பரிவாரம். மலை : தவதி சயந்தம் என்னும் மலை.