பக்கம் எண் :

பக்கம் எண்:501

உரை
 
3. மகத காண்டம்
 
26. பாஞ்சாலராயன் போதரவு
 
           அயிர்த்தவ னகன்றன னாதலி னிவனொடு
           பயிர்ப்பினி வேண்டா பற்றுத னன்றெனப்
     60    பெயர்த்தவன் மாட்டுச் செயற்பொரு ளென்னென
           அகத்தர ணிறையப் பெரும்படை நிறீஇப்
           புறப்படப் போந்தெற் புணர்க புணர்ந்தபின்
           செறப்படு மன்னனைச் சென்றன நெருக்குதும்
           என்றனன் விடுத்தலி னன்றென விரும்பிக்
 
                 (ஆருணியரசன் செயல்)
              58 - 64 : அயிர்த்த.........விடுத்தலின்
 
(பொழிப்புரை) அது கேட்ட ஆருணி மன்னன் அவர்களை நோக்கி, ''நண்பரீர்! அவ்வுதயணன் இவ்வருடகாரனைப் பெரிதும் ஐயுற்று விலகிப் போயினான். ஆதலின், இனி இவ்வருடகாரனோடு நாம் மனங் கலவாதிருத்தல் வேண்டா! அவனைப் பெரிதும் கேண்மை கொள்ளுதல் நன்றென்று கூறிவிடுப்ப''. அது கேட்ட அம்மறவர் மீண்டும் அவ்வருடகாரன் பாற் சென்று, ''நண்பனே ! இனி யாம் செய்தற்குரிய காரியம் யாது'' என்று வினவாநிற்ப, அது கேட்ட வருடகாரன் ''நண்பரீர் ! நம்முடைய அரண்மனையினுள்ளே நிறையப் பெரும்படைகளை நிறுத்தி வைத்து, நீங்கள் நம் மன்னனோடு எஞ்சிய படைகளையும் திரட்டிக் கொண்டு புறப்பட்டு என்பால் வருக ! அங்ஙனம் வந்தவுடனே யாம் சினத்தற்குரிய பகைமன்னனாகிய உதயணன் மேல் படையோடு சென்று அவனைத் தாக்குவேம்'' என அறிவித்து அம்மறவரை ஆருணியின் பால் விடுத்தலாலே ; என்க.
 
(விளக்கம்) அயிர்த்து - ஐயுற்று. அவன் : உதயணன். இவனொடு - வருடகாரனொடு. பயிர்ப்பு - மனங்கலவாதிருக்குந்தன்மை. பற்றுதல் - கேண்மை கொள்ளல். செயற் பொருள் - செய்தற்குரிய காரியம். அகத்தரண் - அரணகம். நிறீஇ - நிறுத்தி. எற்புணர்க - என்பால் வருக. செறப்படுமன்னனை : உதயணனை.