பக்கம் எண் :

பக்கம் எண்:509

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           பைந்தளிர்ப் படலைப் பாஞ்சால ராயற்கு
     15    வந்துகண் கூடிய வருட காரன்
           அருளிக் கேண்மெனத் தெருளக் கூறும்
           மாரிப் பெரும்புனல் வருவா யடைப்பின்
           ஏரிப் பெருங்குள நீர்நிறை யிலவாம்
           அற்றே போலப் பற்றா மன்னற்குத்
     20    தலைவரும் பெரும்படை தொலைய நூறிற்
           சுருக்க மல்லது பெருக்க மில்லை
 
                   (வருடகாரன் செயல்)
              14 - 21 : பைந்தளிர் ......... இல்லை
 
(பொழிப்புரை) பசிய தளிர் விரவிய படலைமாலை யணிந்த ஆருணி மன்னனை வந்துகண்ட வருடகாரன், ''அரசே! யான் கூறும் இதனைக் கேட்டருள்க'' என்று தொடங்கி அவன் உணர்ந்துகொள்ளும்படி கூறுவான் : ''வேந்தே ! மழையினாலே பெருகிய வெள்ளம் வருகின்ற வழியை அடைத்துவிடின் ஏரியாகிய பெரிய குளங்கள் நீர் நிறைதல் இலவாம். அதுபோல நம் பகைமன்னனுக்குத் துணையாக வாராநின்ற பெரிய படைகளை நாம் எதிர்சென்று மறைத்து அழிந்துபோம்படி தாக்குவோமாயின், அப்பகை மன்னன் படைகட்குச் சுருக்கம் உண்டாவதல்லது பெருக்கமுண்டாதலில்லை''; என்க.
 
(விளக்கம்) வந்து கண்கூடிய - வந்துகூடிய. கேண்ம் - கேட்க. தெருள - தெளிவாக. மாரியினால் பெருகிய புனல் என்க. வருவாய் - வரும் வழி. ஏரியாகிய பெருங்குளம் என்க. பற்றாமன்னன் : உதயணன். நூறில் - தாக்கில்.