பக்கம் எண் :

பக்கம் எண்:523

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           திமிரம் பாய்ந்த வமர்மயங் கமயத்துச்
           சிலைத்தன தூசி மலைத்தன யானை
           ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர் பல்கணை
           விலங்கின வொள்வா ளிலங்கின குந்தம்
     110    விட்டன தோமரம் பட்டன பாய்மாத்
           துணிந்தன தடக்கை குனிந்தன குஞ்சரம்
           அற்றன பைந்தலை யிற்றன பல்கொடி
           சோர்ந்தன பல்குடர் வார்ந்தன குருதி
           குழிந்தது போர்க்கள மெழுந்தது செந்துகள்
     115    அழிந்தன பூழி விழுந்தனர் மேலோர்
 
                      (இதுவுமது)
             106 - 115 : திமிரம்.........மேலோர்
 
(பொழிப்புரை) இருள் பரவிய போர்த்தொழில் கலந்த அப்பொழுது, தூசிப்படைகள் ஆரவாரித்தன. யானைகள் போர் செய்தன. காலாள் மறவர்கள் ஆரவாரித்துப் பல்வேறு அம்புகளை யாண்டும் தூர்த்தனர். வாட்படைகள் ஒன்றையொன்று தடுத்தன. ஒளி வாள்கள் மின்னின. குந்தம் எறியப்பட்டன. தோமரம் வீசப்பட்டன. குதிரைகள் இறந்துபட்டன. துணிந்து வீழ்ந்த யானைகளின் பெரிய கைகள் சுருண்டு வீழ்ந்தன. யானைகளின் தலைகள் அற்றன. மறவர்களின் பசிய தலைகள் இற்றன. பல்வேறுகுடர்கள் சரிந்து சோர்ந்தன. பல்வேறு கொடிகள் அற்று வீழ்ந்தன. குருதி வெள்ளம் பாய்ந்தன. போர்க்களம் குழிந்தது. எங்கும் செந்துகள் எழுந்தது. புழுதி மிக்கன. யானை குதிரை தேர் இவற்றின் மேலுள்ள வீரர்கள் பட்டு விழுந்தனர் ; என்க.
 
(விளக்கம்) திமிரம் - இருள். சிலைத்தன - ஆரவாரித்தன. தூசி - கொடிப்படை. மலைத்தன போர் செய்தன, விளங்கின - குறுக்கிட்டன; தடுத்தன. குந்தம் - கைவேல். தோமரம் - ஒருவகைப் படைக்கலன். குனிந்தன - சுருண்டன. குருதிபடிந்த களமாதலால் செந்துகள் என்றார். மேலோர் : குதிரை முதலியவற்றின் மேலிருந்த வீரர்கள்.