பக்கம் எண் :

பக்கம் எண்:524

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
            இப்படி நிகழ்ந்த காலை வெப்பமொடு
            பெரும்படைச் செற்றத் திருங்கடன் மாந்திக்
            குஞ்சரக் கொண்மூக் குன்றடைந்து குழீஇக்
            காலிய லிவுளிக் கடுவளி யாட்ட
     120     வேலிடை மிடைந்து வாளிடை மின்னக்
            கணைத்துளி பொழிந்த கார்வரைச் சாரல்
            ஒருபெருஞ் சிறப்பி னுதயண குமரன்
            பொருபடை யுருமிற் பொங்குபு தொடரத்
 
                    (உதயணன் செயல்)
                116 - 123 : இப்படி.........தொடர
 
(பொழிப்புரை) இவ்வாறு போர் நிகழ்ந்த பொழுது வெவ்விய பெரும் படைகளாகிய சினத்தையுடைய பெரிய கடலைக் குடித்து யானையாகிய முகில்களையுடைய மலையையடைந்து கூடிக், காற்றுப் போல விரைந்து செல்லும் குதிரையாகிய கடிய காற்று அசைத்தலாலே இடையிடையே நெருங்கி வேற்படைகளும் வாட் படைகளும் இடைஇடையே மின்னாநிற்ப, அம்புகளாகிய மழைத்துளி பொழிந்த கரிய மலைச் சாரலின்கண் ஒப்பற்ற பெருஞ்சிறப்பினையுடைய உதயண குமரன் தனது போர்ப்படைகளின் முழக்கமாகிய இடிகளோடு சினந்து போர்த் தொழிலைத் தொடராநிற்ப; என்க.
 
(விளக்கம்) காலாட்படையாகிய கடனீரைக் குடித்து : படைக்குக் கடலுவமை. யானை மை பூசப் பெற்றிருத்தலின் கொண்மூக் குன்று என்றார். கனைத்துளி - அம்பாகிய மழைத்துளி. உருமின் - இடியோடு. பொங்குபு - பொங்கி; சினந்து.