பக்கம் எண் :

பக்கம் எண்:530

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           காதி வெவ்வினை கடையறு காலைப்
     150    போதி பெற்ற புண்ணியன் போல
           வீதல் சான்ற வெகுளி முந்துறீஇ
           எதிர்த்த மன்னனைச் செயிர்த்தனன் றலைப்பெய்
           தியாவரும் வேண்டா விதன்பின்மற் றிவனை
           வீய நூறி வெஞ்சினந் தணிகென
     155    ஏயர் பெருமக னெதிர்வது விரும்ப
 
                  (உதயணன் செயல்)
              149 - 155 : காதி.........விரும்ப
 
(பொழிப்புரை) காதி கருமங்களாகிய வெவ்விய வினைகள் அற்றொழிந்த காலத்தே மெய்யுணர்வினைப் பெற்ற ஓர் அறவோன் போல அவ்வுதயண மன்னன் இறத்தற்குக் காரணமான சினத்தை முற்படுத்தித் தன்னை எதிர்த்த அவ்வாருணி மன்னனைச் சினந்தவனாய் எதிர்த்து இனி எமக்குத் துணையாவார் யாவரும் வேண்டா ! இனிமேல் இவ்வாருணியைச் சாகும்படி தாக்கி யான் என்னுடைய வெவ்விய சினத்தை ஆற்றுகேன் என்று தன்னுட் கருதி அந்த ஏயர் பெருமகன் அவனொடு போர் செய்தலை விரும்பா நிற்ப; என்க.
 
(விளக்கம்) காதிவெவ்வினை - காதி கருமங்கள். அவையாவன - ஞாநாவரணீயம், தரிசநாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷியம், நாமம், கோத்திரம், அந்தராயம் என்னும் எட்டுவகை வினைகள், ''காதி கண்ணரிந்த காசில், தனிமுதிர் கடவுள்'' (சீவக. 1240), ''காதிக் கண்ணரிந்து வென்ற உலகுணர் கடவுள்'' (சீவக. 2713), என்பவற்றாலும் அவற்றின் உரைகளாலும் உணர்க. போதி - மெய்யறிவு, ''போதிச் செல்வம் பூண்டவர்'' (சீவக. 366). வீதல் சான்ற - இறத்தலமைந்த. செயிர்த்தனன் - சினந்தனன். இதன்பின் என்றது இனிமேல் என்பதுபட நின்றது. வீய - சாக. தணிகு - தணிவேன். ஏயர்பெருமகன் : உதயணன்.