பக்கம் எண் :

பக்கம் எண்:536

உரை
 
3. மகத காண்டம்
 
27. பறை விட்டது
 
           நகரத் தாளர் புகரறக் கூறுவர்
     200   தொல்வழி வந்தவெம் பெருமக னெழுதிய
           வெல்பொறி யோலை விடுத்தபி னல்லது
           புகுதர விடோமிந் நகர்வயின் யாமென
 
                (நகர மாந்தர் கூறுதல்)
               199 - 202 : நகர.........என
 
(பொழிப்புரை) அது கேட்ட அந் நகரப் பெருங்குடி மக்கள் குற்ற மறக் கூறுபவர், ''ஐய ! தொன்று தொட்டு வழி வழி வந்த எம்மரசனாகிய உதயண மன்னன் எழுதிய வெற்றியையுடைய இலச்சினையையுடைய ஓலையை எமக்கு விடுத்த பின் திறப்ப தல்லது இப்பொழுது யாங்கள் இந்நகரத்தினுள்ளே பிறர் புகுதற்குக் கதவினைத் திறந்துவிடேம்'' என்று கூறாநிற்ப ; என்க
 
(விளக்கம்) நகரத்தாளர் - நகராட்சித் தலைவர்களுமாம். புகர் - குற்றம். நன்கு தெரிந்து கொள்ளாமல் திறந்து விடுதல் குற்றமாகலின் அக்குற்றம் வாராமைப் பொருட்டுக் கூறுவர் என்பார், புகரறக் கூறுவர் என்றார். தொல் வழி - தொன்று தொட்டுத் தொடர்ந்து வருகின்ற மரபு எம் பெருமகன் என்றது உதயணனை. வெல்லோலை - வெற்றியை யுணர்த்தும் ஓலை. பொறியோலை - இலச்சினையிட்ட ஓலை.