பக்கம் எண் :

பக்கம் எண்:542

உரை
 
4. வத்தவ காண்டம்
 
1. கொற்றங்கொண்டது
 
           நன்னாட் கொண்டு துன்னினர் சூழ
     15    வெங்கண் யானைமிசை வெண்குடை கவிப்பப்
           பொங்குமயிர்க் கவரி புடைபுடை வீசக்
           கங்கை நீத்தங் கடன்மடுத் தாங்குச்
           சங்கமுந் துரமு முரசினோ டியம்ப
           மன்பெரு மூதூர் மாசன மகிழ்ந்து
     20    வாழ்த்து மோசை மறுமொழி யார்க்கும்
           கேட்பதை யரிதாய்ச் சீர்த்தகச் சிறப்ப
 
                  (இதுவுமது)
           14 - 21 : நன்னாள்..........சிறப்ப
 
(பொழிப்புரை) நல்லதொரு முழுத்தத்திலே தன்னுடைய ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் தன்னைச் சூழ்ந்து வாராநிற்ப, வெவ்விய கண்ணையுடைய களிற்றியானையின் எருத்தத்திலேறி இருந்து, கொற்றவெண்குடை நிழற்றா நிற்பவும், மிக்க கவரிமான் மயிராலாகிய சாமரைகள் இருமருங்கும் வீசவும், கங்கைப் பேரியாற்றின் வெள்ளம் கடலிலே புகுந்தாற்போல, சங்குகளும் துரங்களும் (?) முரசங்களும் முழங்கா நிற்பவும், தலைநகரமாகிய பழைய அக்கோசம்பி நகரத்துப் பெருமக்கள் உளமகிழ்ந்து தன்னை வாழ்த்துகின்ற ஆரவாரம், அங்குப் பிறர் கூறுகின்ற மறுமொழியை யாரும் கேட்டற்கியலாதபடி புகழோடு சிறவா நிற்பவும்; என்க.
 
(விளக்கம்) நன்னாள் - அரசுகட்டில் ஏறுதற்குரிய நல்ல முழுத்தம். துன்னினர் - ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் ஆகிய அரசியற் சுற்றத்தார். வெங்கண்யானை - ஈண்டு அரசயானை. நீத்தம் - வெள்ளம். துரம் - ஒருவகை இசைக்கருவிபோலும். இயம்ப - முழங்க மன்மூதூர், பெருமூதூர் எனத் தனித்தனி இயைத்துக்கொள்க. மாசனம் - பெருமக்கள். மறுமொழி - ஒருவர்க்கொருவர் கூறும் மொழி. கேட்பதை - கேட்பது; கேட்டல்: ஐகாரம்