பக்கம் எண் :

பக்கம் எண்:543

உரை
 
4. வத்தவ காண்டம்
 
1. கொற்றங்கொண்டது
 
           ஊழி தோறு முலகுபுறங் காத்து
           வாழிய நெடுந்தகை யெம்மிடர் தீர்க்கெனக்
           கோபுரந் தோறும் பூமழை பொழியச்
     25    சேயுயர் மாடத்து வாயில் புக்குத்
 
                 (இதுவுமது)
             22 - 25 : ஊழி.........புக்கு
 
(பொழிப்புரை) வாயில் மாடந்தோறும் மாந்தர் மேனின்று எம்பெருமான் ஊழி தோறு ஊழி இவ்வுலகத்தைக் காத்து வாழ்க ! எம்முடைய இடர் களைந்து எம்மைப் பாதுகாத்தருளுக ! என்று கூறி மலர்மழை பொழியா நிற்பவும் மிகஉயர்ந்த கோபுரத்தினையுடைய பெருவாயிலிலே நுழைந்து; என்க.
 
(விளக்கம்) நெடுந்தகை: நெடிய புகழையுடைய உதயணன். கோபுரம் வெளிக்கோபுரமும் உட்கோபுரமும் எனப் பலவாகலின் கோபுரந்தோறும்  பூமழை பொழிய என்றார். சேயுயர்மாடம் - மிக உயர்ந்த கோபுரம். அத்தாணி மண்டபமுமாம்.