பக்கம் எண் :

பக்கம் எண்:547

உரை
 
4. வத்தவ காண்டம்
 
2. நாடு பாயிற்று
 
          விளங்கவை நடுவண் வீற்றினி திருந்த
          வளங்கெழு தானை வத்தவர் பெருமகன்
          வெங்கொல் வேந்தன் வேற்றுநா டிதுவெனத்
          தன்கோ லோட்டித் தவற்றி னாட்டிய
     5    புன்சொற் படுநுகம் புதியவை நீக்கிச்
          செங்கோற் செல்வஞ் சிறப்ப வோச்சி
          நன்னக ரகத்து நாட்டக வரைப்பினும்
          தொன்மையின் வந்த தொல்குடி யெடுப்பிப்
 
            (உதயணன் செங்கோற் சிறப்பு)
            1 - 8 : விளங்கவை............எடுப்பி்
 
(பொழிப்புரை) இவ்வாறு சான்றோர் அவை நடுவண் அரசு கட்டிலேறி இனிதே வீற்றிருந்த வளமிக்க படையினையுடைய அவ்வத்தவர் வேந்தன் முன்னர் கொடுங்கோலனாகிய ஆருணி வேந்தன் இந்நாடு எனக்கு வேற்று நாடேயாகும் என்னும் கருத்தாலே நாட்டன்பு சிறிதுமின்றித் தன்னுடைய கொடுங்கோன்மையைச் செலுத்தித் தீய நெறிகளிலே நிலைநிறுத்திவைத்த பழிக்குக் காரணமான புதிய வரிச்சுமைகள் பலவற்றையும் நீக்கித் தனக்கியல்பான செங்கோன்மையை அந் நாட்டிலே செல்வந் தழைக்கும்படி நடாத்தி நல்ல நகரங்களிடத்தும் ஊர்களிடத்தும் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை உயர்த்தி; என்க.
 
(விளக்கம்) பெருமகன் : உதயணன். வெங்கோல் வேந்தன் என்றது ஆருணியை. வேற்று நாடு இஃது என்னுங் கருத்தால் நாட்டன்பின்றி என்றவாறு. தன்கோல் என்றது தனக்கியல்பான கொடுங்கோல் என்பதுபட நின்றது. தவற்றின் - தவறான வழிகளில். புன்சொல் - பழிச்சொல். படுநுகம் - பெரிய அரசியற் சுமை; என்றது வரிச்சுமையை. செங்கோல் ஓச்சி என்க. செங்கோலாவது - அரசனால் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோலெனப்படும்.

  "இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
   பெயலும் விளையுளுந் தொக்கு" -- குறள், 545

என்னும் பொன்மொழி பற்றிச் செல்வம் சிறப்பச் செங்கோலோச்சி என்றார். எடுப்பி - உயர்த்தி. புதுவாழ்வளித்து என்றவாறு.