பக்கம் எண் :

பக்கம் எண்:549

உரை
 
4. வத்தவ காண்டம்
 
2. நாடு பாயிற்று
 
         
     20    செல்வப் பெரும்புனன் மருங்கற வைகலும்
           நல்கூர் கட்டழ னலிந்துகை யறுப்ப
           மானம் வீட லஞ்சித் தானம்
           தளராக் கொள்கையொடு சால்பகத் தடக்கிக்
           கன்னி காமம் போல வுள்ள
     25    இன்மை யுரையா விடுக்க ணாளிரும்
 
                    (இதுவுமது)
           20 - 25 : செல்வ..............இடுக்கணாளிரும்
 
(பொழிப்புரை) தம்மிடத்தினின்றும் செல்வமாகிய வெள்ளம் வடிந்து விட்டமையாலே நாள்தோறும் வறுமையென்னும் பெருநெருப்புத் தம்மை வருத்திச் செயலறவு செய்தலாலே தம் மானத்தை அழித்தற்கஞ்சித் தந்நிலையினின்றும் தளராத கொள்கையுடனே தம் சான்றாண்மையாலே அத்துன்பத்தைத் தமக்குள்ளேயே அடக்கிக்கொண்டு காமம் மீதூர்ந்த விடத்தும் அதனைப் பிறர்க்குக் கூறாத கன்னியர் போல, இன்மை மிக்கவிடத்தும்அதனைப் பிறர்க்குக் கூறாத பெருந்தகைமையுடைய இடுக்கணை மேற்கொண்ட வறுமையுடையீரும்; என்க.
 
(விளக்கம்) செல்வமாகிய புனல் என்க. வறுமையை நெருப்போடுவமித்தலின் செல்வத்தைப் புனல் என்றார். மருங்கறுதல் - தம்மிடத்தினின்றும் அற்றுப்போதல். நல்கூர் - நல்குரவு; வறுமை.