பக்கம் எண் :

பக்கம் எண்:550

உரை
 
4. வத்தவ காண்டம்
 
2. நாடு பாயிற்று
 
           ஊக்கமும் வலியும் வேட்கையும் விழைவும்
           மூப்படர்ந் துழக்க முடங்கி னீரும்
           யாப்பணி நன்னலந் தொலைய வசாஅய்த்
           தீப்பிணி யுற்றுத் தீரா தீரும
 
                   (இதுவுமது)
          26 - 29 : ஊக்கமும்...................தீராதீரும
 
(பொழிப்புரை) மனக் கிளர்ச்சியும் வலிமையும் அவாவும் விருப்பமும் என்னும் இவையெல்லாம் கிழப்பருவம் மேலிட்டு உழக்குதலாலே கெட்டு உடல் வளைந்துபோன முதுமையுடையீரும், உடற்கட்டும் அழகும் நல்ல இளமை நலமும் தொலைந்து போம்படி தொழு நோய் முதலிய தீப்பிணியுற்று அப்பிணி தீரப் பெறாமல் மெலிந்தீரும்; என்க.
 
(விளக்கம்) ஊக்கம் - மனக்கிளர்ச்சி. வலி - உடல் வலியும் மன வலியும் ஆம். வேட்கை - அவா. விழைவு - விருப்பம். இவை இரண்டும் காரணமும் காரியமும் ஆம். மூப்பு - முதுமை. உடல் முடங்கினீர் என்க. வீட்டினுள்ளே முடங்கிக் கிடந்தீரும் எனினுமாம். யாப்பு - உடற்கட்டு. அணி - உடலழகு. நன்னலம் என்றது இளமையின் நலத்தை, தீப்பிணி - தொழு நோய் முதலியன. அசாஅய் - மெலிந்து.