பக்கம் எண் :

பக்கம் எண்:551

உரை
 
4. வத்தவ காண்டம்
 
2. நாடு பாயிற்று
 
           இடுமணன் முற்றத் திண்ணியங் கறங்கக்
           குடுமிக் கூந்தலு ணறுநெய் நீவி
           நல்லவை நாப்பட் பல்சிறப் பயர்ந்து
           கொண்டேன் றுறந்து கண்கவிழ்ந் தொழுக
           வாழ்த லாற்றாச் சால்பணி மகளிரும்
 
                   (இதுவுமது)
           30 - 34 : இடு.......................மகளிரும்
 
(பொழிப்புரை) புதுவதாகக்  கொணர்ந்து மணல் பரப்பிய முற்றத்திலே பந்தலின்கண் இன்னிசைக் கருவிகள் ஆரவாரிப்ப நல்ல சான்றோர் அவை நடுவண் குடுமியினும் கூந்தலினும் நறிய நெய்யை ஏற்றிப் பல்வேறு சிறப்புக்களையுஞ் செய்து தம்மை மணந்து கொண்ட கணவன் தம்மைக் கைவிட்டுப் பின்னர்த் தம்மை நிமிர்ந்து பாராமல் ஒழுகாநிற்றலால் வாழ்விழந்து போய்த் தமது சான்றாண்மையையே அணிகலனாகக்கொண்டு உயிர்த்திருக்கின்ற குலமகளிரும்; என்க.
 
(விளக்கம்) இடுமணல் - கொணர்ந்து பரப்பிய புது மணல், இன்னியம் - இனிய இசைக்கருவி, குடுமி - மணமகன் குடுமி. கூந்தல் - மணமகள் கூந்தல். இனி, குடுமி உச்சி எனினுமாம். அவை - திருமண அவை. சிறப்பு - கரணங்கள். கொண்டோன் - மணந்துகொண்டோன். கண்கவிழ்ந்தொழுகுதல் - நிமிர்ந்து பாராமல் ஒழுகுதல். சால்பு - சான்றாண்மை.