உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
2. நாடு பாயிற்று |
|
நிறைப்பெருங் கோலத்து நெறிமையின்
வழாஅ உறுப்புக் குறை பட்டீ ருட்படப்
பிறரும் வந்தனிர் குறுகி நுங்குறை
யுரைத்துத் துன்ப நீங்க வின்பம்
பயப்ப வேண்டின கொள்ளப் பெறுதிர்
நீரென 40 மாண்ட வீதியொடு மன்ற
மெல்லாம் ஆர்குரன் முரச மோவா
ததிரக்
|
|
(இதுவுமது) 35
- 41 : நிறை................அதிர
|
|
(பொழிப்புரை) நிறைந்த பேரழகினையுடைய வீதிகளிலே
செல்லுங்கால் வழுவித் தேர் முதலிய ஊர்திகளால் உறுப்புகளிழந்து குறையப்பட்டீரும்,
இன்னோரன்ன பிறரும் வந்து அணுகி உங்கள் துன்பம் நீங்கவும் நுங்கள் வாழ்க்கை நுமக்கு
இன்பம் உண்டாக்கவும் நுமக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள்களையெல்லாம்
பெற்றுக்கொள்ளக் கடவீர் ! என்று அறிவியாநின்ற ஆரவாரமுடைய ஓசையையுடைய அறமுரசங்கள்
மாட்சிமையுடைய தெருக்களிலும், மன்றங்களிலும் இடையறாது முழங்காநிற்பவும்,
என்க.
|
|
(விளக்கம்) நிறைப்பெருங்கோலத்து நெறிமை என்றது,
ஒப்பனையையுடைய வீதிகளில் செல்லும் முறைமையை. வழுவுதல் - அறியாமையால் தவறி நடத்தல்.
வழாஅ உறுப்புக் குறைபட்டீர் எனவே தேர் முதலியவற்றிற் றாக்குண்டு
உறுப்புக்களையிழந்தவர்களை அரசியலார் பாதுகாத்தல் வேண்டும் என்பது பண்டைக் காலத்து
அரசியல் நீதிஎன்பது உணரப்படும். குறை - இன்றியமையாத வேண்டு கோள். வேண்டியன -
வேண்டப்படும் பொருள். மாண்ட வீதி - சிறப்பான வீதிகள். மன்றம் - நகராள் மன்றம்;
அறவோர் மன்றம் இன்னோரன்ன. ஆர்குரல் : வினைத்தொகை. முரசம் - அறமுரசம். ஓவாது -
ஒழியாமல்.
|