பக்கம் எண் :

பக்கம் எண்:577

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
              நோக்கின னருகே யாக்க மின்றி
              இறைவற் பிரிந்த வில்லோள் போலவும்
              சுருங்கக ஞெகிழ்ந்து.........
              ........................................
              பத்தற் கேற்ற பசையமை போர்வை
  75          செத்துநிறங் கரப்பச் செழுவளங் கவினிய
              கொய்தகை கொடியொடு மெய்யுற நீடிய
              கரப்பமை நெடுவேய் நரப்புப்புறம் வருடத்
              தாஅந் தீமெனத் தண்ணிசை முரலத்
              தீந்தொடைத் தேனினஞ் செற்றி யசைதர
  80          வடிவேற் றானை வத்தவர் பெருமகன்
              படிவ விரதமொடு பயிற்றிய நல்லியாழ்
 
                  (உதயணனது யாழின் நிலை)
                  71 - 81: அருகே............யாழ
 
(பொழிப்புரை) அவ்வேங்கை மரத்தின் பக்கத்தே தனக்கு மங்கலம் சிறிதும் இல்லாமல் தன் கணவனைப் பிரிந்து தனித்திருக்கும் மனைவி போலவும் சுருங்கிய உள்ளிடம் நெகிழ்ந்து......... ...............பத்தலின் தன்மைக்கியைந்த பசையால் ஒட்டப்பட்ட போர்வை மக்கி நிறங்கெடவும் மிக்க வளத்தோடு அழகுற்ற கொய்தற்குத் தகுந்த தளிர்மலர் முதலியவற்றையுடைய கொடிகள் படரப்பெற்றுத் தன் உடலை மறைத்த வளர்ந்த நெடிய மூங்கிற் கிளை தன் நரம்பினை வருடாநிற்றலால் அந் நரம்புகள் தாஅம் தீஇம் எனக் குளிர்ந்த இன்னிசையை முரலா நிற்பவும், தேனடையைச் செய்யும் வண்டினங்கள் செறிந்து தன் மேல் பரவா நிற்பவும் வடித்த வேலேந்தும் படைகளையுடைய வத்தவ மன்னனாகிய உதயணன் பண்டு பிரமசரிய விரதத்தோடிருந்து பயின்ற நல்ல கோடவதி என்னும் அத் தெய்வ யாழ்; என்க.
 
(விளக்கம்) ஆக்கம் - மங்கலம். இறைவன் - கணவன். இல்லோள் - மனைவி. ஞெகிழ்ந்து, நெகிழ்ந்து; போலி, இவ்விடத்தே 73 ஆம் அடியில் இரண்டு சீரும் அடுத்து ஒரு முழுஅடியும் சிதைந்தன. பத்தல், போர்வை என்பன யாழுறுப்புக்கள். போர்வை செத்து என்றது போர்வை மக்கி என்றவாறு. வேய் - மூங்கில். வேயின் சினை வருட என்க. தாஅம் தீஇம் : ஒலிக்குறிப்புமொழி, தீந்தொடை - தேனடை. தேனினம் - வண்டினம். செற்றி - நெருங்கி, பெருமகன் - உதயணன். படிவவிரதம் - பிரமசரிய விரதம். யாழ் - கோடபதி என்னும் யாழ்.