பக்கம் எண் :

பக்கம் எண்:579

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
             கிடந்தது கண்டே நடுங்குவன னாகி
             யானை நீங்கலுந் தானவட் குறுகிக்
             கின்னர ரிட்டன ராயினு மியக்கர்
  95         மெய்ம்மறந் தொழிந்தன ராயினு மேலைத்
             தேவ ருலகத் திழிந்த தாயினும்
             யாவ தாயினும் யான்கொள றுணிந்தனென்
             வலியா தெனக்கு வம்மி னீரெனப்
             பலியார் நறுமலர் பற்பல தூஉய்
  100         வழுக்கா மரபின் வழுத்தினன் கொண்டு்
 
                  (அருஞ்சுகன் செயல்)
               92 - 100 : கிடந்தது.........கொண்டு
 
(பொழிப்புரை) ஆங்குக் கிடந்ததனை அவ்வருஞ்சுகன் அம் மரத்திலிருந்தவாறே கண்டு அந்த யானைகளுக்கு அஞ்சுவானாய் நடுங்கி நெடும்பொழுதிருந்து அந்த யானைகள் அவ்விடத்தினின்றும் போனபின்னர் ஒருவாறு துணிந்து மரத்தினின்றும் இறங்கி அந்தயாழ் கிடந்த இடத்தையணுகி அதனைநோக்கி, "அந்தோ! இவ்விடத்தே இந்த யாழினை இட்டுப்போனவர் கின்னரரோ ? இயக்கரோ யாரேயாயினும் ஆகுக. இன்னவர் இதனை இவ்விடத்திட்டுத் தம் மெய்ம்மறந்து போயினர்போலும்; அல்லது இந்த யாழ் தேவருலகத்தினின்றும் இவ்விடத்தே வீழ்ந்ததோ? யாவதாயினும் ஆகுக! யான் இதனை எடுத்துக் கொள்ளத் துணிந்து விட்டேன்" என்று கூறி அவ்யாழிற்குப் பலியாக நறிய மலர் பலவற்றை அதன்மேற் றூவி வணங்கியவனாய் அவ்யாழைத் தன் கைகளாற் பற்றி, "யாழீரே! யாதும் கருதாமல் எம்பால் வருவீராக" என்று கூறி அதனைக் கையிலெடுத்துக் கொண்டு; என்க.
 
(விளக்கம்) கிடந்தது கண்டுவைத்தும் யானைக்கு அஞ்சி நடுங்குவானாக என்க. அவண் - அந்தயாழ் கிடந்த இடத்தை. அந்தயாழ் நிலஉலகத்து யாழ்போலாது மிகவும் சிறந்திருத்தலின் கின்னரருடையதோ இயக்கருடையதோ தேவருலகத்தினின்றும் இழிந்ததோ என்று ஐயுறுவானாயினன் வலியாதெனக்கு வம்மின் நீர் என்றது அருஞ்சுகன் யாழை நோக்கிக் கூறியதாம். பலி - வழிபாட்டுப் பொருள். வழுக்காமரபு என்றது யாழ் எடுக்கும் மரபினை.