பக்கம் எண் :

பக்கம் எண்:588

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
          சங்க மன்னர் தந்த முரிமை
     15    புன்கண் டீரப் புறந்தந் தோம்பி
          வாட்டொழிற் றருசகன் மீட்டனன் போக்கி
          மன்னர் சிறையும் பின்னர்ப் போக்குதும்
          உருமண் ணுவாவை விடுக விரைந்தெனக்
          கரும மாக்களைப் பெருமகன் விடுத்தலிற
 
                 (தருசகன் செயல்)
             14 - 19 ; சங்க............விடுத்தலின்
 
(பொழிப்புரை) விரிசிகன் முதலிய சங்க மன்னர்கள் போரின்கண் விட்டுப்போன அவர்தம் பொருள்களை யெல்லாம் அவர்கள் துன்பம் தீர்தற்பொருட்டு நன்கு பாதுகாத்து வாட்போரின்கண் ஆற்றல் மிக்க தருசக மன்னன் அப்பொருள்களை மீட்டும் அவர்கள்பால் விடுத்து யாங்கள் சிறைபற்றியுள்ள எலிச்செவியரசன் தம்பியையுள்ளிட்ட அரசர்களைச் சிறைவீடுசெய்து நும்பால் பின்னர் உய்ப்பேம், இப்பொழுது நீவிர் விரைந்து நும்மால் சிறை கொளப்பட்ட உருமண்ணுவா என்னும் அமைச்சனைச் சிறைவீடு செய்து எம்பால் வரவிடுக! என்று சொல்லித் தூதர்களை அத்தருசக மன்னன் அப்பகைமன்னர்பால் விடுத்தலாலே; என்க.
 
(விளக்கம்) சங்கமன்னர் - விரிசிகன் முதலிய எண்மரும். தந்தம்: அசை. புன்கண் - துன்பம். புறந்தந்தோம்பி - நன்கு பாதுகாத்து; அவர்பால் போக்கி என்க. மன்னர் : எலிச்செவியரசன் தம்பி முதலியோர். உருமண்ணுவா எம்பால் வந்தபின்னர்ப் போக்குதும் என்றவாறு. கருமமாக்கள் - தூதுவர். பெருமகன் - தருசகன்.