பக்கம் எண் :

பக்கம் எண்:594

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
         
     50    ஓலை காட்ட வுள்ளம் புகன்று
           மேலை பட்டவுந் தேவி நிலைமையும்
           வாசனை யகத்தே மாசற வுணர்ந்தும்
           எம்வயிற் றீர்ந்தபிற் செய்வகை யெல்லாம்
           வாயி னுரைக்கெனச் சாதகன் கூறும்
 
          (உருமண்ணுவா சாதகனை வினவல்)
             50 - 54: உள்ளம்...............கூறும்
 
(பொழிப்புரை) அவ்வோலையைக் கண்ட அவ்வுருமண்ணுவா நெஞ்சத்தே பெரிதும் விரும்பி அதனை ஓதுதல் வாயிலாய் அதன்கண் அமைந்த செய்திகளைக் குற்றமற உணர்ந்த பின்னரும் அச்சாதகனை நோக்கி, "நண்பனே! நீ முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் கோப்பெருந்தேவி நிலைமையினையும் எம்மைவிட்டு நீங்கள் பிரிந்து போன பின்னர் நீங்கள் செய்த செயல் வகைகளையெல்லாம் நின் வாயாலேயே கூறுக" என்று வேண்டாநிற்ப அச் சாதகன் கூறுவான் ; என்க.
 
(விளக்கம்) புகன்று - விரும்பி. மேலைப்பட்டவும் - முன்பு நிகழ்ந்தவற்றையும். தேவி : வாசவதத்தை. வாசனை - வாசித்தல். எம்வயிற்றீர்ந்தபின் - எம்மைவிட்டு நீங்கள் பிரிந்துபோன பின்னர். அவற்றையெல்லாம் ஓலையின்கண் வரையவில்லையாகலின் நின் வாயாற் கூறுக என்றவாறு. கூறும் - கூறுவான்.