பக்கம் எண் :

பக்கம் எண்:597

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
           செட்டி மகனொ டொட்டினம் போகிப்
           பண்டம் பகரும் பட்டினம் பயின்ற
     70    புண்டரம் புகீஇப் புதைத்த வுருவொடு
           பொருத்தஞ் சான்ற புரைதபு நண்பின்
           வருத்த மானன் மனைவயின் வைத்தபின்
           வருத்த மானற் கொத்த தம்முன்
           இரவி தத்த னென்னு முரவோன்
     75    பெரும்படை தொகுத்துவந் தரம்புசெய் தலைத்தலின்
           இருந்த நகரமுங் கலங்க மற்றவன்
           அருந்தொழின் மலையர ணடைந்தன மாகி
           இருந்த பொழுதி லிப்பா லரசற்கு
 
                   (இதுவுமது)
           68 - 78 : செட்டி..........பொழுதில்
 
(பொழிப்புரை) மித்திரகாமன் என்னும் அச்செட்டி மகனோடு சேர்ந்து சென்று பல்வேறு பண்டங்களும் விற்றற்குரிய பட்டினத்தை ஒருபாலுடைய புண்டர நகரத்துட் புகுந்து அவ்விடத்தே மாறுவேடத்தோடு யாமுறைதற்குப் பொருத்தமான குற்றமற்ற நண்பினையுடைய வருத்தமானன் என்னும் ஒரு குறு நிலமன்னன் மனையிடத்தே தேவியை மறைத்துவைத்த பின்னர் அந்த வருத்தமானனுடைய மனதிற்கொத்த தமையன் இரவிதத்தன் என்னும் வலிமைமிக்க அரசன் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வந்து குறும்பு செய்து அவ்வருத்தமானனை அலைத்தலாலே யாங்கள் மறைந்திருந்த நகர முழுவதும் கலங்குதலாலே அவ்வருத்தமானனுடைய பகைவர் அணுகுதற்கரிய தொழிற் சிறப்பையுடைய மலையரணை அடைந்து இருந்த காலத்தில்; என்க.
 
(விளக்கம்) செட்டி மகன் : மித்திரகாமன். ஒட்டினம் - சேர்ந்து. பண்டம் - பொருள்கள். பட்டினம் - துறைமுகமுடைய பகுதி. புண்டரம் - ஒரு நகரம். புகீஇ - புகுந்து. புதைத்த உருவொடு - மாறுவேடத்தோடு. பொருத்தம் சான்ற மனை - வருத்தமானன் மனை எனத் தனித்தனி கூட்டுக. தம்முன் - தமையன். ஒத்த - பிறப்பொத்த எனினுமாம். அரம்பு - குறும்பு. மற்றவன் : வருத்தமானன்.