பக்கம் எண் :

பக்கம் எண்:6

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
           முன்னுப காரத்து நன்னயம் பேணித்
           தன்னுயிர் கொடுக்குந் தவமுது தாயும்
     40    விறப்பினிற் பெருகியும் வறப்பினிற் சுருங்கியும்
           உறுதி நோக்கி யுயிர்புரை காதலோ
           டாழ்விடத் துதவு மரும்புணை போலத்
           தாழ்விடைத் தாங்கிச் சூழ்விடைத் துளங்கா
           உள்ள வாற்ற லுறுபுகழ் யூகியும்
 
              (உதயணன் இரங்கல்)
           38 - 44 ; முன்......................யூகியும்
 
(பொழிப்புரை) ''முன்னொரு காலத்து யான் செய்த
  உதவியின்  நல்ல  பயனை  நெஞ்சத்தே  மறவாது
  நினைந்திருந்து, அதற்குக்  கைம்மாறாக  என் பொருட்டுத்
  தனது உயிரையே வழங்கும் தவத்தையும் முதுமையையும்
  உடைய சாங்கியத்தாயும், என்னுடைய செல்வக் காலத்தே
  தானும் மனம் மகிழ்ந்து பெருக்க மடைந்தும், என்னுடைய
  நல்கூர்தல் உடைய அல்லற் காலத்தே தானும் அல்லலுற்று
  மனஞ்சுருங்கியும் நண்பனாகிய தன் கடமையை  நோக்கித்
  தனது ஆருயிரின்பால் அன்புறுமாறு போன்று என்பாலும்
  அன்புகூர்ந்து நிலைகொள்ளற் கியலாத வெள்ளத்தே ஆழ்ந்த
  இடத்திலே உதவாநின்ற அரிய தெப்பம் போல எனது தாழ்வுக்
  காலத்தே என்னைத் தாங்கி உய்யக் கொண்டும் தன்
  தொழிலாகிய சூழ்ச்சிப் பொழுதில் மனத் தடுமாற்றமில்லாத
  நெஞ்சுரம் படைத்த மிக்க புகழையுடைய யூகியும்;'' என்க,
 
(விளக்கம்) முன்னுபகாரம் என்றது முன்னொரு. காலத்தே
  சாங்கியத் தாயைப் புலையன் மணற்குடம்பூட்டி யமுனையாற்றில்
  முழுகுவித்துக் கொல்லத் தொடங்கிய காலத்தே உதயணன் 
  அவளை மீட்டு உயிர்வாழச் செய்ததனை, இந்நிகழ்ச்சியை 
  உஞ்சைக் காண்டத்தே 'சாங்கியத்  தாய் உரை' என்னும் (36-ஆம்)
  காதையிற் காண்க. உயிர்  காடுத்தது என்றது அவளும் வாசவதத்தை
  யோடு கோயில் வேவினுள் தீயில் இறந்தனள், என்னும் தன்
  கருத்தினை, என்க. தாய்-சாங்கியத் தாய். விறப்பு-மிகுதி.  அஃதாவது
  செல்வக்காலம். வறப்பு-நல்குரவு, உறுதி-நண்பன் கடமை. அஃதாவது
  ''உடுக்கை இழந்தவன் கை போல'' நண்பனுக்குற்ற இடுக்கண்களையும்
  கடமை என்க. புரை; உவமையுருபு. உயிரைக் காதலிக்குமாறு போலக்
  காதலிக்கும் காதல் என்றவாறு. புணை-தெப்பம். தாழ்விடை-தாழ்வுற்ற
  காலம். உள்ள ஆற்றல் -நெஞ்சுரம், உறு-மிகுதி.