பக்கம் எண் :

பக்கம் எண்:605

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
          முற்றிழை பயிற்றிய முற்பெரு நல்லியாழ்
  20      கற்பே னென்றசொற் கட்டழ லுறீஇ
          வேலெறிந் தன்ன வெம்மைத் தாகிக்
          காவல குமரற்குக் கதுமென விசைப்ப
          மாசி றாமரை மலர்கண் டன்ன
          ஆசில் சிறப்பி னமரடு தறுகண்
  25      இளநல முண்ட விணையி றோகை
          வளமயிற் சாயல் வாசவ தத்தையை
          நினைப்பி னெகிழ்ந்து நீர்கொள விறைஞ்சிச்
          சினப்போ ரண்ணல் சேயிழை மாதர்க்கு
          மனத்தது வெளிப்பட மறுமொழி கொடாஅன்
 
         (வாசவதத்தையை நினைந்து உதயணன் கலங்கல்)
               19 - 29: முற்றிழை...........கொடாஅன்
 
(பொழிப்புரை) அப் பதுமாபதி நிரம்பிய அணிகலனணிந்த வாசவதத்தை நல்லாள் நின்பாற் பயின்ற பேரியாழாகிய நல்ல கோடவதியினை யானும் நின்பால் பயில்வேன் என்று கூறிய சொல், மிக்க தீயிலிட்டு வெந்த வேலால் மார்பிலே எறிந்தாற்போன்ற வெம்மையையுடையதாகி இறைமகனாகிய அவ் வுதயணன் செவியில் ஞெரேலென்று புகாநிற்றலால் குற்றமற்ற செந்தாமரை மலரையொத்த நல்ல அளிச் சிறப்போடு பகைவரைப் போரின்கண் கொல்லும் மறப்பண்பு மிக்க அம்மன்னவன் கண்களிலே தான் இளநலங் கூட்டுண்ட ஒப்பற்ற தோகையையுடைய வளவிய மயில் போன்ற சாயலையுடைய அவ்வாசவதத்தையை நினைத்தலாலே மனம் நெகிழ்ந்து நீர் நிறையா நிற்பத் தலை கவிழ்ந்து வெகுளிமிக்க போராற்றலுடைய அவ்வண்ணல் சிவந்த அணிகலனணிந்த அப்பதுமாபதி நங்கைக்குத் தன் மனத்தின் கண்ணுள்ள கருத்து வெளிப்படும்படி யாதும் மறுமொழி கொடான் ஆக; என்க.
 
(விளக்கம்)   முற்றிழை - தொழிற்றிறம் முற்றிய இழையுமாம்; அன்மொழி : வாசவதத்தை. முற்பெறு நல்லியாழ் என்றது, நால்வகை யாழினுள் வைத்து முதலாவதாகிய பேரியாழ் என்றவாறு. வாசவதத்தை பயின்ற யாழ் என்று பதுமாபதி கூறியதனால் வாசவதத்தையின் நினைவு உதயணன் நெஞ்சத்தே தோன்றியது என்பது கருத்து. சொல் வெம்மைத்தாகி இசைப்ப என்க. இளநலம் - இளமைக்குரிய காம இன்பம். நினைப்பின் - நினைத்தலாலே. தறுகண் நீர் கொள என்க. இறைஞ்சி - தலைகுனிந்து.