பக்கம் எண் :

பக்கம் எண்:609

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
          முதிர்மலர்த் தாமமொடு முத்துப்புரி நாற்றிக்
          கதிர்மணி விளக்கங் கான்றுதிசை யழல
  50      விதியிற் புனைந்த வித்தகக் கைவினைப்
          பதினைந் தமைந்த படையமை சேக்கையுட்
          புதுநலத் தேவியொடு புணர்தல் செல்லான
 
        (உதயணன் வாசவதத்தையை நினைந்து வருந்தித் துயிலல்)
                 48 - 52 : முதிர்.........செல்லான்
 
(பொழிப்புரை) வளைந்த மலர்மாலையோடே முத்துவடங்களையும் தூங்கவிட்டு ஒளிமிக்க மணிவிளக்கங்கள் ஒளிகான்று நாற்றிசையினும் விளங்கா நிற்ப, நூல் முறைமையினாலே இயற்றப்பட்ட வித்தகமிக்க தொழிற் சிறப்பையுடைய பதினைந்தாகப்படுத்த படைகள் அமைந்த படுக்கையின்கண் புதிய இன்பத்தையுடைய தேவியாகிய அப்பதுமாபதியோடு இன்றுயில் கோடலும் செய்யானாய்; என்க.
 
(விளக்கம்)  முதிர் மலர்த்தாமம் - வளைந்த மலர்மாலை. முதிர்தல் - வளைதல். முத்துப்புரி - முத்துவடம். ஒளிகான்று - அழல என்க. விதி - நூல்விதி. வித்தகம் - சதுரப்பாடு. பதினைந்தமைந்த படையமை சேக்கை - பதினைந்து அடுக்கினையுடைய படுக்கை. அஃதாவது சிறு பூளை, செம்பஞ்சு, வெண்பஞ்சு, சேணம், உறுதூவி, சேக்கை ஓர் ஐந்து என்னும் இவ்வைந்தினையும் அடுக்கிய ஒன்று மும்மூன்றாகப் படுத்த பதினைந்து படையையுடைய படுக்கை என்க. ஐந்து மூன்றடுத்த அமளி எனக் கலியினும் (10 : 10), ஐந்து மூன்றடுத்த செல்வத்தமளி எனச் சிந்தாமணியினும் (838) வருதல் காண்க. புதுநலத் தேவி: பதுமாபதி : புணர்தல் செல்லான் : ஒரு சொல்.