பக்கம் எண் :

பக்கம் எண்:61

உரை
 
3. மகத காண்டம்
 
5. பதுமாபதி போந்தது
 
         
           பொருள்புரி யமைச்சர் பூங்கழற் குருசிலொ
           டிருளறு திருமணி யிராசகிரி யத்துப்
           புறமதி லொடுங்கிய பொழுதின் மறனுவந்
           தமரா மன்ன ரருஞ்சம முருக்கிப்
     5     பைங்கழ லமைந்த பாடமை நோன்றாள்
           வெண்கதிர் மதியின் வீறொளி திகழ்ந்து
           தான்மீக் கூரிய வேம வெண்குடை
           மணிமுடிச் சென்னி மகத மன்னவன்
           தணியா வேகத்துத் தருசகன் றங்கை
 
          மகத மன்னவன்
     1-9 ; பொருள்..................தங்கை
 
(பொழிப்புரை) எதிர் காலத்திற்கு ஆக்கந் தருகின்ற
  செயல்களை விரும்பிச் செய்கின்ற உருமண்ணுவா முதலிய
  அமைச்சர் பொலி வுடைய வீரக்கழலணிந்த வேந்தனாகிய 
  உதயணனோடு இருளறுதற்குக்  காரணமான 
  மணிமண்டபங்களையுடைய   இராசகிரிய நகரத்தின்  புறத்தே 
  கரந்துறைந்த  காலத்தே   மறச்சிறப்பினை விரும்பிப் பகை
  மன்னரோடு செயற்கரிய போர் செய்து வென்று பசிய வீரக்
  கழலணிந்த பெருமை பொருந்திய வலிய முயற்சியினாலே
  வெள்ளிய கதிரையுடைய முழுத்திங்கள் போன்று மிக்க
  ஒளியாலே பிறமன்னர் குடைகளினும் காட்டிற் றலைசிறந்த உயிர்
  கட்குப் பாதுகாவலாக வமைந்த வெண்கொற்றக் குடையினையும்
  மணி பதித்த கொற்ற முடிபுனைந்த சென்னியினையும் உடைய மகத
  நாட்டரசனாகிய தணியாத சினத்தையுடைய தருசகனுடைய
  தங்கையாகிய என்க,
 
(விளக்கம்) அமைச்சர் - உருமண்ணுவா முதலியோர்
  அமரா மன்னர்-பகையரசர். பாடு - பெருமை. நோன்றாள் - வலிய
  காலுமாம், வீறு -வேறொன்றற்கில்லாத சிறப்பு ; மீக்கூரிய -மீக்
  கூர்ந்த ; தலை சிறந்த. வேகம் - சினம். தங்கையாகிய பதுமாபதி (27)
  என இயையும்.