பக்கம் எண் :

பக்கம் எண்:612

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
          
  65      வாய்ந்த வைகறை வையக வரைப்பின்
          நாற்கட லும்பர் நாக வேதிகைப்
          பாற்கடற் பரப்பிற் பனித்திரை நடுவண்
          வாயுங் கண்ணுங் குளம்பும் பவளத்
          தாயொளி பழித்த வழகிற் றாகி
  70      விரிகதிர்த் திங்களொடு வெண்பளிங் குமிழும்
          உருவொளி யுடைத்தா யுட்குவரத் தோன்றி
          வயிரத் தன்ன வைந்நுனை மருப்பிற்
          செயிர்படு நோக்கமொடு சிறப்பிற் கமைந்ததோர்
          வெண்டா ரணிந்த வெள்ளேறு கிடந்த
  75      வண்டார் தாதின் வெண்டா மரைப்பூ
          அங்கண் வரைப்பி னமரிறை யருள்வகைப்
          பொங்குநிதிக் கிழவன் போற்றவு மணப்ப
          மங்கலங் கதிர்த்த வங்கலு ழாகத்துத்
          தெய்வ மகடூஉ மெய்வயிற் பணித்துப்
  80      பையு டீரக் கைவயிற் கொடுத்தலும்
 
               (உதயணன் கனவு காண்டல்)
            65 - 80: வையகம்.................கொடுத்தலும்
 
(பொழிப்புரை) அவ்வுதயணமன்னன் ஒரு கனாக்கண்டானாக, அது வருமாறு: இவ்வுலகத்தின்கண் நான்கு கடல்களுக்கப்பால் உள்ள ஆதிசேடன் என்னும் பாம்பாகிய மேடையினையுடைய திருப்பாற்கடல் பரப்பிலே, குளிர்ந்த அலைகளின் நடுவே வாயானும் கண்களானும் குளம்புகளானும் பவளத்தினது அழகிய ஒளியினும் சிறந்த செவ்வொளி படைத்ததாகித் தன் திருமேனி விரிந்த கதிரையுடைய திங்களையும் வெள்ளிய பளிங்கையும் போன்று வெள்ளொளியை வீசாநிற்பக் காண்போர்க்கு அச்சம் வருமாறு முளைத்து வச்சிரப்படை போன்ற கூர்த்த நுனிகளையுடைய கொம்புகளையும் சினமிக்க நோக்கத்தையும் தனது சிறப்பினுக்குப் பொருந்திய ஒரு வெண்மலர் மாலையினையும் அணிந்த வெள்ளிய ஆனேறு படுத்துக்கிடந்த வண்டுகள் மொய்க்கின்ற பூந்தாதுகளையுடைய வெண்டாமரைப் பூ ஒன்றனை அழகிய இடமமைந்த வானுலகத்தின்கண் வாழும் தேவர் கோமானாகிய சௌதருமேந்திரன் அருளிச் செய்தமையால் மிக்க நிதிக்கிழவனாகிய குபேரன் பாராட்டா நிற்பவும் எங்கும் மணம் கமழா நிற்பவும் மங்கலம் தோன்றி அழகொழுகுகின்ற தெய்வப் பெண்ணொருத்தி அம்மலரின் வரலாற்றைத் தன்பாற் கூறித் தன் துன்பமெல்லாந் தீரும்படி தன் கையிலே கொடாநிற்ப; என்க.
 
(விளக்கம்)  நான்கு கடல்களுக்கும் அப்பாலுள்ளது பாற்கடல் என்பது சைனர் கொள்கை. நாக வேதிகை - ஆதிசேடனாகிய மேடை. வாயாலும் கண்ணாலும் குளம்பாலும் பவழத்து ஒளியைப் பழித்த அழகு என்க. திங்களையும் பளிங்கையும் ஒத்த உருவொளி என்க. வைரம் - வச்சிராயுதம். உட்குவரத் தோன்றி என்றது, மருப்பிற்கு அடை. வை - கூர்மை. மருப்பு - கொம்பு. செயிர் - சினம். வெண்டார் - வெண்ணிற மலர் மாலை : வெள்ளிய கோடுமாம். வெள்ளேறு - வெள்ளைக் காளை. தாமரைப் பூவினைக் கொடுத்தலும் என்க. அமர் இறை - அமரர் இறை; என்றது சௌதருமேந்திரனை. நிதிக்கிழவன் - குபேரன். அங்கலுழ் ஆகம் - அழகொழுகும் உடம்பு. தெய்வமகடூஉ - தெய்வப் பெண். மெய்வயிற் பணித்து - வரலாற்றுண்மையைக் கூறி. பையுள் - துன்பம்.