பக்கம் எண் :

பக்கம் எண்:613

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
           பயில்பூம் பள்ளித் துயிலெடை மாக்கள்
           இசைகொள் ளோசையி னின்றுயி லேற்று
           விசைகொண் மான்றேர் வியல்கெழு வேந்தன்
           கனவின் விழுப்ப மனவயி னடக்கி
 
             (உதயணன் துயிலெழுதல்)
             81 - 84: பயில்............அடக்கி
 
(பொழிப்புரை) மலர் மிகுந்த பள்ளியின்கண் துயிலா நின்ற அரசனைத் துயிலினின்றும் எழுப்புகின்ற பணியாளர்களாகிய துயிலெடை மாக்கள் இசைக்கின்ற இன்னிசையையுடைய பண்ணொலியினாலே அக் கனா நிலையினின்றும் துயிலுணர்ந்து எழுந்த விரைவுமிக்க குதிரை பூண்ட தேரினையுடைய பெருமை பொருந்திய அவ்வுதயண வேந்தன் தான் கண்ட கனவின் சிறப்பினைத் தன் நெஞ்சத்துள் அடக்கி வைத்துக்கொண்டு; என்க.
 
(விளக்கம்) பயில் பள்ளி : வினைத்தொகையாகக்கொண்டு பயிலும் பள்ளி எனினுமாம். துயிலெடை மாக்கள் - மன்னரைத் துயிலெழுப்பும் பணியாளர். இவரைச் சூதர் என்றும் கூறுப, ''சூத ரேத்திய துயிலெடை நிலை'' என்பது தொல்காப்பியம் (புறத்திணை. சூ. 36.) வியல் - பெருமை. விழுப்பம் - சிறப்பு.