பக்கம் எண் :

பக்கம் எண்:616

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
          இந்நா ளகத்தே சின்மொழிச் செவ்வாய்
          நன்னுதன் மாதரை நண்ணப் பெறுகுவை
          பெற்ற பின்றைப் பெய்வளைத் தோளியும்
          கொற்றக் குடிமையுட் குணத்தொடும் விளங்கிய
  105      விழுப்பெருஞ் சிறப்பின் விஞ்சைய ருலகின்
          வழுக்கில் சக்கரம் வலவயி னுய்க்கும்
          திருமகற் பெறுதலுந் திண்ணிது திரியா
 
                   (இதுவுமது)
               101 - 107: இந்நாள்............திரியா
 
(பொழிப்புரை) "மன்ன! நீ இன்றைக்கே சிலவாகிய மொழி பேசுதலையும் சிவந்த வாயையும் நல்ல நெற்றியையும் உடைய அவ்வாசவதத்தையை அடைகுவை ! அவளை அடைந்த பின்னர் வளையலணிந்த தோள்களையுடைய அத்தேவிதானும், வெற்றியுடைய உயர்குடியின்கண் தோன்றியதனாலுண்டாகும் நற்பண்புகளோடும் விளங்கிய மிகப்பெருஞ் சிறப்பினையுடைய விச்சாதரர் உலகத்தின்கண்ணும் குற்றமற்ற தனது ஆணைச் சக்கரத்தைத் தனது ஆற்றலாலே செலுத்தும் திருமகன் ஒருவனைப் பெறுதலும் உறுதி; இவ்விரண்டும் பிறழமாட்டா"; என்க.
 
(விளக்கம்)  இந்நாளகத்தே - இன்றே. மாதரை : வாசவதத்தையை. தோளி : வாசவதத்தை. வழுக்கு - குற்றம். சக்கரம் - ஆணை. திண்ணிது : ஒருமை பன்மை மயக்கம். மாதரைப் பெறுதலும் அவள் மகப் பெறுதலும் ஆகிய இரண்டும் திரியா என்க.