பக்கம் எண் :

பக்கம் எண்:62

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
     10     பசும்பொற் கிண்கிணி பரடுசுமந் தரற்ற
           அசும்பம றாமரை யலைத்த வடியினள்
           சிறுபிடித் தடக்கையிற் செறிவொடு புணர்ந்து
           மென்மையி னியன்று செம்மைய வாகி
           நண்புவீற் றிருந்த நலத்தகு குறங்கினள்
     15     மணியும் பவழமு மணிபெற நிரைஇய
           செம்பொற் பாசிழை செறிய வீக்கிய
           பைந்துகி லணிந்த பரவை யல்குலள்
           துடிதோங் கூறிய விடுகிய நடுவிற்குப்
           பார மாகிய வீரத் தானையள்
 
        பதுமாபதியின் அடிமுதல் முடிவரையமைந்த அழகு
             10-19 ; பசும்பொன்,,,,,.,,,தானையள்
 
(பொழிப்புரை) பசிய பொன்னாலியன்ற கிண்கிணியணி
  தன்காற் பரட்டாற் சுமக்கப்பட்டு ஒலியா நிற்கும் நீருற்றின்
  கண்தோன்றிய தாமரை மலரைத் தோற்பிக்கும் அழகுடைய
  சிற்றடிகளையுடையவளும், சிறிய பிடி யானையின் பெரிய கை
  போன்றனவாய் ஒன்றனோடொன்று நெருங்கிச் சேர்ந்து
  மென்மைப் பண்பின் மிகுந்து செம்மையுடையனவுமாகிக்
  கேண்மைப் பண்பு வீற்றிருந்த அழகாலே தகுதிபெற்ற
  துடைகளையுடையவளும், மாணிக்கமும் பவழமும் அழகுண்டாக
  நிரல் படக் கோத்த செம்பொற்பசியமேகலை அணிகலன்
  பொருந்தக் கட்டிய பசிய ஆடையணிந்த பரந்த
  அல்குலையுடையவளும், உடுக்கையைப் பழித்த நுண்ணிய
  இடைக்குச் சுமையாகிய மற முன்றானையையுடையவளும் என்க.
 
(விளக்கம்) கிண்கிணி பரட்டாற் சுமக்கப்பட்டு அரற்ற
  என்க. அசும்பு-நீரூற்று. அமலுதல் - தோன்றுதல், செறிதலுமாம்.
  இளமைக்குச் சிறுபிடி கூறினர். "ஈர்ந்து நிலந்தோயும்
.  இரும்பிடித்தடக்கையிற் சேர்ந்துடன் செறிந்த குறங்கு" என்றார்
  சிறுபாணினும் (19-20). குறங்கு - துடை. மணி - மாணிக்கம்.
  துடி-உடுக்கை. தோம் - குற்றம். நடு - இடை. கன்னியாகலின்
  அல்குற்குக் காவலா யமைந்து ஆடவரை அச்சுறுத்தலான்
  ஆடைக்கு மறங்கூறினர்.