பக்கம் எண் :

பக்கம் எண்:628

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
         நயக்குங் காத னல்வளைத் தோளியைப்
  40     பெயர்க்கும் விச்சையிற் பெரியோற் கண்டவன்
         உவக்கு முபாய மொருங்குடன் விடாது
         வழிபா டாற்றி வல்லிதிற் பெறீஇய
         கழிபெருங் காதலொடு சென்றபி னவ்வழிக்
 
                        (இதுவுமது)
            39 - 43 : நயக்கும்..............சென்றபின்
 
(பொழிப்புரை) "வேந்தே ! நீ இத்துணை விரும்புதற்குக் காரணமான காதலையுடைய அழகிய வளையலணிந்த தோள்களையுடைய அவ்வாசவதத்தையை மீட்டுத்தரும் வித்தையிலே பெரியோனாகிய ஒரு முனிவனைக் கண்டு அவன் விரும்புகின்ற உபாயங்களை ஒருங்கே மேற்கொண்டு கடைப்பிடியாக அம்முனிவனுக்கு வழிபாடுசெய்து வன்மையோடு அவ்வாசவதத்தையைப் பெறும் பொருட்டு மிகவும் பெரிய காதலோடு நம் நாட்டினை அகன்று வேற்று நாட்டிற்குச் சென்றபின்னர்" என்க.
 
(விளக்கம்)  தோளி : வாசவதத்தை. பெயர்க்கும் விச்சை - மீட்டற்குரிய வித்தை. பெரியோன் : முனிவன். உவக்கும் உபாயம் - உவத்தற்குக் காரணமான உபாயம். கழிபெருங் காதல் - மிகவும் பெரிய காதல், வேற்று நாட்டிற்குச் சென்ற பின்னர் என்க.