பக்கம் எண் :

பக்கம் எண்:631

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
         திருவார் மார்பன் தெரிந்தவற் குரைக்கும்
  55     வடுவாழ் கூந்தல் வாசவ தத்தையொ
         டிடைதெரி வின்மையி னவளே யிவளென
         நயந்தது நெஞ்ச நயவா தாயினும்
         பால்வகை வினையிற் படர்ந்த வேட்கையை
         மால்கடல் வரைப்பின் மறுத்தன ரொழுகுதல்
  60     யாவர்க் காயினு மாகா ததுவென
         மேவரக் காட்டலு மீட்டுங் கூறுவன்
 
                  (உதயணன் கூற்று)
               54 - 61 : திரு...........கூறுவன்
 
(பொழிப்புரை) திருமகள் வீற்றிருக்கும் மார்பினையுடைய உதயண மன்னன் அவ் வயந்தகன் கூற்றிற்குத் தகுந்த மறுமொழியினை நன்கு ஆராய்ந்து கூறுவான், "நண்பனே! வகிர்வு ஆழ்ந்து கிடக்கும் கூந்தலையுடைய வாசவதத்தைக்கும் இப்பதுமாபதிக்கும் வேற்றுமை தெரிந்துகோடல் இயலாமையின் அவ்வாசவதத்தையே அம் முனிவன் வித்தையினாலே உயிர் பெற்று வருகின்றாள் என்று கருதி இப் பதுமாபதியை என்னெஞ்சம் பெரிதும் விரும்புவதாயிற்று; ''அங்ஙனமில்லை, நின் மனம் இவளை வேறொருத்தி என்று அறிந்தே விரும்பிற்றுக் காண்'' என்று நீ கூறுவையாயினும் அதுவும் என் குற்றமன்று. ஊழ்வினையினாலே பண்டும் பண்டும் பற்பல பிறப்புக்களினும் அடிப்பட்டுவருகின்றதாய் ஒருத்தியின்மேல் செல்லாநின்ற விருப்பத்தைப் பெரிய கடல் சூழ்ந்த இப் பேருலகத்தின்கண் மாற்றியொழுகும் ஒழுக்கம் எத்தகையோர்க்கும் இயலாத தொன்றாம்" என்று அவன் கூற்றிற்குப் பொருத்தமாக அப்பெருந்தகை மறுமொழி கூறிய உடன் அவ்வயந்தகன் அம்மன்னனைப் பாராட்டி மீண்டும் கூறுவான்; என்க.
 
(விளக்கம்)  இப்பகுதியில் உதயணன் தன்னை இடித்துரைக்கும் வயந்தகன் சுடுசொல்லைப் பொறுத்துக் கோடலும், ஒருவாறு தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பொருத்தமாக மறுமொழி கூறுதலும் அம்மன்னன் மாண்பினைப் பலபடி உயர்த்திக் காட்டுதல் காண்க. ஈண்டு,

  "இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
   கெடுக்குந் தகைமை யவர்"

என்றற்றொடக்கத்துத் திருக்குறள்களும்,

  "செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
   கவிகைக்கீழ்த் தங்கு முலகு"

என்னும் குறளும் நினைவிற்கு வருகின்றன. திரு - திருமகள். தெரிந்து - ஆராய்ந்து. வடுஆழ் கூந்தல் - வகிர்ந்த கோடு ஆழ்ந்து கிடக்குங் கூந்தல். இடை : வேற்றுமை. அவளே இவள் - அவ்வாசவதத்தையே பதுமாபதி. பால் வகைவினை - ஊழ்வினை. யாவர்க்காயினும் - எத்தகைய சான்றோர்க்கும். மேவர - பொருத்தமுண்டாக. மீட்டும் வயந்தகன் கூறுவான் என்க.