பக்கம் எண் :

பக்கம் எண்:64

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
    
           கன்னி யாயந் துன்னுபு சூழ
           மதிற்புறங்  கவைஇய புதுப்பூங் காவின்
     30    மகர வெல்கொடி மகிழ்கணைக் காமற்கு
           நகரங் கொண்ட நாளணி விழவினுள்
           எழுநா டோறுங் கழுமிய காதலொடு
           வழிபா டாற்றிய போதரு மின்றென
           அழிகவுள் வேழத் தணியெருத் தேற்றிய
     35    இடியுமிழ் முரசி னிருங்கண் டாக்கி
           வடிவேற் கொற்றவன் வாழ்கெனப் பல்லூழ்
           அணித்திரட் கந்தின் மணிப்பொற் பலகைச்
           சித்திர முதுசுவர் வித்தக வேயுள்
           ஆவணந் தோறு மறைந்தறி வுறுத்தலின்
 
           முரசறைதல்
     28 - 39 : கன்னி.........அறிவுறுத்தலின்
 
(பொழிப்புரை) தன்னுடைய  கன்னியராகிய தோழியர்
  கூட்டம் தன்னைச் சூழ்ந்து வாராநிற்ப நகரமதிலின் புறத்தே
  வளைந்த புதுமலர்க்காவிலே  மகரமீன்  எழுதப்பட்டதும் 
  அனைவரையும் வெல்லும் ஆற்றலுடையதும் ஆகிய
  கொடியினையும், கூடிமகிழ்தற்குக் காரணமான மலர்களையும்
  உடைய காமதேவனுக்கு நமது நகரம் எடுக்கின்ற திருநாளாகிய
  அழகிய விழவினூடே ஏழுநாளும் நிறைந்த அன்போடே
  அக்கடவுளை வழிபாடு செய்தற்கு இற்றைநாள் எழுந்தருளுவாள்
  என்று கூறி வள்ளுவர் மதநீராற் சிதைந்த கவுளையுடைய
  யானையின் அழகிய எருத்தின் கண்ணே ஏற்றப்பட்ட இடிபோன்று
  முழங்கும் முரசத்தின் கரிய கண்ணிலே குணிலாலே தாக்கி 'வடித்த
  வேலையுடைய வெற்றியுடைய நம்மரசர் பெருமான் வாழ்வானாக ! '
  என்று வாழ்த்திப் பன்முறையும் நிரல்பட்ட திரண்ட தூண்களையும்
  மணிபதித்த பொன்னாலியன்ற பலகைகளையும் சித்திரமுடைய பழைய
  சுவர்களையும் வித்தகத் தொழிலாலே இயற்றிய கூரையினையும்
  உடைய அங்காடித் தெருத்தோறும் முழக்கி அறிவுறுத்தலாலே என்க.
 
(விளக்கம்) தருசகன் தங்கை பதுமாபதி எனுங்
  கோமகள் இன்று போதரும் என்று முரசறைந்து அறிவுறுத்தலின்
  என்க, ஆயம் - தோழியர் கூட்டம். கவைஇய-வளைந்துகிடந்த.
  நகரம் - நகரமாந்தர். ஆகுபெயர். கழுமிய-நிறைந்த.
  ஆற்றிய - ஆற்றற்கு. இன்று  போதரும் என மாறுக.
  இடியுமிழ்; உவமத்தொகை. கண் - முரசின்பக்கம்
  பல்லூழ் - பன்முறையும். கந்து - தூண். வித்தகம் - சிற்ப
  முதலிய கலைப்பண்பு. ஆவணம் - கடைத்தெரு.