பக்கம் எண் :

பக்கம் எண்:640

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           நூனெறி வழாஅ நுனிப்பொழுக் குண்மையின்
     35    ஏனை யுலகமு மிவற்கே யியைகெனக்
           கணவனை நோக்கி யிணைவிரல் கூப்பி
           மழுகிய வொளியின ளாகிப் பையெனக்
           கழுமிய காதலொடு கைவலத் திருந்த
           கோட பதியின் சேடணி கண்டே
     40    மகக்காண் டாயின் மிகப்பெரிது விதும்பிச்
 
                   (இதுவுமது)
             34 - 40 : நூல்..........விதும்பி
 
(பொழிப்புரை) மெய்ந்நூல் கூறிய நெறியில் வழுவாத நுணுக்கமான நல்லொழுக்கம் இந்நம்பி பால் இருத்தலாலே இம்மை மாறிச் செல்லும் மேனிலையுலகத்தும் யானே இவனுக்குக் காதலியாகுக! என்று விரும்பி அக்கணவனைக் கூர்ந்து பார்த்துக் கைகூப்பித் தொழுது ஒளி மழுங்கியவளாய் மெல்ல அணுகி நிறைந்த காதலோடே அவன் கையின் பக்கத்தே இருந்த கோடவதி என்னும் தெய்வ யாழினது பெருமை மிக்க அழகினைக் கண்டு தன் மகவினைக் காணுகின்ற தாயைப்போல மிகவும் விதுப்புற்று; என்க.
 
(விளக்கம்) நூல் - அற நூல். நுனிப்பொழுக்கு - நுணுகிய ஒழுக்கம். ஏனையுலகம் - இம்மை மாறுங்கால் புகும் மேனிலையுலகம். காதலியாக இயைக என்க. இணை விரல் - கை; ஆகுபெயர். மழுகிய - மழுங்கிய. கைவலத்து - கையின் பக்கத்தே. சேடணி - பெருமை மிக்க அழகு. விதும்பி - விரைதலுற்று; பரபரப்புற்று.