பக்கம் எண் :

பக்கம் எண்:644

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           மயங்குபூஞ் சோலை மலைவயி னாடிப்
     55    பெயர்ந்த காலை நயந்தனை யொருநாள்
           தழையுங் கண்ணியும் விழைவன தம்மென
           வேட்டம் போகிய போழ்திற் கோட்டம்
           கூரெரி கொளுவ வாரஞ ரெய்தி
           இன்னுயிர் நீத்த விலங்கிழை மடவோய்
     60    நின்னணி யெல்லா நீக்கி யோராப்
           பின்னணி கொண்டு பிறளே போன்றனை
 
              (மீண்டும் உதயணன் அரற்றல்)
              54 - 61 : மயங்கு.............போன்றனை
 
(பொழிப்புரை) "நங்காய் ! கண்டோர் மயங்குதற்குக் காரணமான பூஞ்சோலையையுடைய மலைச்சாரலில் யாம் உண்டாடி மீண்டும் அரண்மனைக்கு வந்த காலத்தே ஒருநாள் நீ என்னை நோக்கிப் பெரிதும் விருப்பம் உடையையாய் ''எனக்கு அப்பூஞ்சோலையின்கண் உள்ள தழையையும் கண்ணிகளையும் கொணர்ந்து தருக. அவை என்னால் பெரிதும் விரும்பப்படுவனவாம்'' என்று வேண்டா நிற்றலால் யான் நின் வேண்டுகோட்கிணங்கி மீண்டும் அம் மலைச் சாரலுக்கு வேட்டையாடப் போன பொழுது வேடர் அரண்மனையின்கண் வெம்மை மிக்க நெருப்பை மூட்டுதலால் பொறுத்தற்கரிய துன்பத்தையடைந்து இனிய உயிரைவிட்ட விளங்காநின்ற அணிகலன்களையுடைய மடந்தாய்! நீ இப்பொழுது நின்னுடைய அணிகலன்களையெல்லாம் அகற்றி யான் அறிதற்கியலாதபடி பின்னுதலுடைய சடையை மட்டுமே அணியாகக் கொண்டு பிறள் ஒருத்தியைப் போன்று தோன்றா நின்றனை; என்க.
 
(விளக்கம்) சோலைமயங்கு மலை எனினுமாம். இச்சோலை இலாவாணக நகரத்தின் அருகிலுள்ள சோலை. ஆடி - உண்டாடி. கண்ணி - மாலை. தம் - தருக. வேட்டம் - வேட்டை. கோட்டம் - கோயில்; என்றது அரண்மனையை. கூரெரி: வினைத்தொகை. ஆரஞர் - பொறுத்தற்கரிய துன்பம். ஓரா - உணர்ந்துகொள்ள மாட்டாதபடி. பின் - சடை. பின்னாகிய அணி. பிறள் - அயலாள்.