பக்கம் எண் :

பக்கம் எண்:646

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           வழுக்கில் சீர்த்தி வயந்தக னடைஇ
           ஒழுக்கிய றிரியா யூகியொ டுடனே
     70    நாளை யாகு நண்ணுவ தின்றுநின்
           கேள்வ னன்பு கெடாஅ னாகுதல்
           துயிலுறு பொழுதிற் றோன்றக் காட்டுதல்
           அயில்வேற் கண்ணி யதுநனி வேண்டித்
           தந்தே மென்பது கேளெனப் பைந்தொடி
 
        (அமைச்சர் வாசவதத்தையை உதயணனிடமிருந்து பிரித்தல்)
                68 - 74 : வழுக்கில்...............கேளென
 
(பொழிப்புரை) குற்றமற்ற பெரிய புகழையுடைய வயந்தகன் அங்குச் சென்று வாசவதத்தையை நோக்கி, 'பெருமாட்டீ ! கேட்டருள்க! நீ நல்லொழுக்கின்கட் பிறழாத யூகி உடனிருப்பவே எம்பெருமானை நாளைக்கு எய்துவதே தகுதியாம்; இற்றை நாள் நின்னை யாங்கள் இங்கே கொணர்ந்தது எற்றுக் கென்பாயாயின் கூரிய வேல் போலுங் கண்ணையுடையோய்! நின்னுடைய கணவன் நின்பால் அன்பு அறாதவனாய் இருக்கும் உண்மையை அவன் துயிலுங் காலத்தே நினக்குத் தோன்றும்படி காட்டுதலாகிய அதனை யாங்கள் மிக விரும்புதலாலேயாம்' என்று அறிவியாநிற்ப; என்க.
 
(விளக்கம்) வழுக்கு - குற்றம். சீர்த்தி - மிகுபுகழ். நீ நின் கணவனை அடையும்பொழுது யூகியும் நின்னுடன் இருத்தல் வேண்டும் என்பது கருத்து. இன்று - காட்டுதல்வேண்டி நின்னை ஈண்டுத் தந்தேம் என்க. துயிலுங்கால் தோன்றும் மொழிகளாலும் இங்கிதங்களாலும் நின்பால அன்பு குறையாதிருத்தலைக் காட்டக் கருதி என்க. கண்ணி : விளி. அது -  காட்டுதலாகிய அதனை தந்தேம். கொணர்ந்துவிட்டேம்.