பக்கம் எண் :

பக்கம் எண்:647

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           தந்தே மென்பது கேளெனப் பைந்தொடி
     75    புனைகொல் கரையி னினைவனள் விம்மி
           நிறையில ளிவளென வறையுநன் கொல்லென
           நடுங்கிய நெஞ்சமொ டொடுங்கீ ரோதி
           வெம்முலை யாகத்துத் தண்ணெனக் கிடந்த
           எழுப்புரை நெடுந்தோண் மெல்லென வெடுத்து
     80    வழுக்கில் சேக்கையுள் வைத்தனள் வணங்கி
           அரும்பெறல் யாக்கையி னகலு முயிர்போற்
           பெரும்பெயர்த் தேவி பிரிந்தனள் போந்துதன்
           ஈனாத் தாயோ டியூகியை யெய்தப்
 
                     (இதுவுமது)
             74 - 83: பைந்தொடி................எய்த
 
(பொழிப்புரை) அதுகேட்ட வாசவதத்தை  அவ் வயந்தகன் கூற்றினை நினைபவள் ஒரோவழி, எம்பெருமான் யான், யூகி என்னும் சான்றாவானோடு தன்னை எய்தாமல் இங்ஙனம் தனித்தெய்திய வழி இவள் நிறையிலாள் என்று கூறுவன் என்னுங் கருத்தால் இவ்வமைச்சன் இங்ஙனம் கூறினனோ என்று கருதி நடுங்கிய நெஞ்சத்தோடு வெள்ளத்தால் இடிக்கப்படுகின்ற கரை போன்று தன் நெஞ்சழியாநிற்ப விம்முதலுற்றுச் சடையாக அடங்கிய நெய்ப்புடைய கூந்தலையுடைய அம் மடந்தை வெவ்விய முலையினையுடைய தன் மார்பின்கண் தண்ணென்று கிடந்த உதயணனுடைய இருப்புத்தூண் போன்ற நெடிய கையை மெல்ல எடுத்துத் தூய அப் படுக்கையிற் கிடத்தித் தன் கணவனைக் கைகூப்பி வணங்கிப் பெறுதற்கரிய உடலினின்றும் பிரியா நின்ற உயிர்போலப் பெரிதும் துன்புற்றுப் பெரும் புகழையுடைய அத்தேவி அவனைப் பிரிந்துபோய்த் தன் செவிலித்தாயும் யூகியும் இருந்த இடத்தை எய்தாநிற்ப; என்க.
 
(விளக்கம்) புனை - புனல்; நீர். வயந்தகன் நீ உன் கணவனை எய்துங்கால் யூகியும் உடனிருத்தல் வேண்டும் என்பதற்குக் காரணம் நற்சான்றாகிய அவ்வமைச்சன் உடனில்லாமல் யான் தனியே எம்பெருமானை எய்துமிடத்தே எம்பெருமான் இவள் நிறையிலள் என்று கூறுவான் என்னும் கருத்தோ என்று ஐயுற்று அதனை நினையுந்தோறும் நெஞ்சழிந்து விம்மினாள் என்பது கருத்தாகக் கொள்க. எழு - இருப்புத்தூண் சேக்கை - படுக்கை. பெரும்பெயர் - பெரும்புகழ். ஈனாத் தாய் - செவிலி; ஈண்டுச் சாங்கியத் தாய்.