பக்கம் எண் :

பக்கம் எண்:66

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
     
           அரும்பொறி நுனித்த யவனக் கைவினைப்
           பெரும்பொறி வையத் திருந்தியாப் புறீஇ
     50    மங்கலச் சாந்தின் மலர்க்கொடி யெழுதிப்
           பைம்பொற் பத்திரம் புளகமொடு வீக்கிக்
           கதிர்நகைத் தாம மெதிர்முக நாற்றிப்
           பத்திர மாலை சித்திர மாகப்
           புடைப்புடை தோறுந் தொடக்கொடு தூக்கிக்
     55    கட்டி தோய்த்த காழகி னறும்புகை
           பட்டுநிணர் கட்டிற் பல்படை குளிப்ப
           உள்ளக மருங்கின் விள்ளாக் காதற்
           றுணைநலத் தோழியர் துப்புர வடக்கி
          அணிநலத் தோழிக் கமைந்தன வியற்றி
 
           (பாகன் செயல்)
      48 - 59 : அரும்பொறி,,,,,, ,,இயற்றி
 
(பொழிப்புரை) செயற்கரிய பொறிகளைக் கூர்ந்துணர்ந்து
  இயற்றும் யவனர்கள் கைத்தொழிலானியன்ற  பெரிய 
  பொறிகளையுடைய  வண்டியைத்  திருத்தமாகக்  கோத்து 
  மங்கலமான சந்தனத்தாலே மலர்க்கொடிகளை எழுதிப் பசிய
  பொன்னாலியன்ற இவையுருவங்களைக் கண்ணாடிகளோடு
  ஒளிமிக்க முத்துமாலைகளை முகப்பின்கண் தூங்கவிட்டுப்
  பொன்னாலியன்ற இலைமாலைகளைப் பக்கங்கள்  எங்கும் 
  சித்திரம்  வரைந்தாற்போலே கொக்கிகளிலே தூங்கவிட்டு,
  நேர்கட்டி தோய்த்த முற்றிய அகிலையிட்டுப் புகைத்த
  நறுமணப்புகையிலே பட்டினாற் பிணித்த கட்டிலின்  மேலிட்ட
  பலவாகிய  அடுக்குமெத்தைகள்  மறையும்படி புகைத்து
  அவ்வண்டியின் அகத்தேயமைந்த பக்கங்களிலே வேறுபடாத
  அன்பையுடைய தோழியர் கொணர்ந்த நுகர் பொருள்களை
  அடக்கிவைத்துப் பதுமாபதியின் உசாத்துணைத் தோழிக்கு
  வேண்டிய இருக்கை முதலியனவற்றையும் அமைத்தென்க.
 
(விளக்கம்) பொறி - இயந்திரம். யாப்புறீஇ - கோத்து.
  பொற்பத்திரம் - பொன்னாலியன்ற இலைகள். புளகம் -  கண்ணாடி.
  நகைத்தாமம் - முத்துமாலை, தொடக்கு - கோக்கி. இதனை
  இக்காலத்தார் கொக்கி என்று வழங்குப. கட்டி - புகையுறுப்புக்களுள்
  ஒன்றாகிய நேர்கட்டி. இதனை, 'நேர்கட்டி செந்தே னிரியாசம்
  பச்சிலை ஆரமகிலுறுப் போடாறு' என்பதனாலுணர்க
  (சிலப் - 5 ; 14 அடியார்க்கு நல்லாருரை) அகிலுறுப்பு ஆறாகவும்
  தலைமைபற்றிக் கட்டியொன்றே கூறியொழிந்தார்.  புகையில் குளிப்பப்
  புகைத்தென்க, தோழியர் கொணர்ந்த துப்புரவு என்க. துப்புரவு - நுகர்
  பொருள். அணிநலத் தோழி என்றது உசாத்துணைத் தோழியை.