பக்கம் எண் :

பக்கம் எண்:663

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           பூந்தார் குழையப் புல்லினன் பொருக்கெனத்
           தீந்தேன் கலந்த தேம்பால் போல
           நகையுருத் தெழுதரு முகத்த னாகித்
           துறந்தோர்க் கொத்த தன்றுநின் சிறந்த
    195    அருள்வகை யென்னா வகலுந் தோழனைப்
           பொருள்வகை யாயினும் புகழோய் நீயினி
           நீங்குவை யாயி னீங்குமென் னுயிரெனப்
 
                      (இதுவுமது)
             191 - 197 : பொருக்கென............உயிரென
 
(பொழிப்புரை) அங்ஙனம் அரசன் தழுவியவுடன் யூகி பொருக்கென இனிய தேன் கலந்த இனிய பால்போலும் இனிதாகப் புன்னகை முகிழ்த்துத் தவழும் முகத்தையுடையவனாய் ''வேந்தே! நீ இங்ஙனம் மார்புறத் தழுவிச் செய்யும் இவ் வருண் முறை சிறந்ததேயாயினும், துறந்தோர்க்குப் பொருந்துவதொன்றன்று காண்!'' என்று கூறி அகலாநிற்ப, அங்ஙனம் அகலாநின்ற அத் தோழனை நோக்கி உதயணன். 'புகழுடையோய் ! நீ இனிச் செயத்தக்க காரிய வகையாலே என்னைப் பிரிந்து போவாயேனும் என் உயிரும் என்னைப் பிரிந்துபோதல் ஒரு தலைகாண்! ஆதலாலே போகாதே கொள்!' என்று கூறி என்க.
 
(விளக்கம்) உருத்து - உருக்கொண்டு. அரசர் முனிவரைத் தழுவிக் கோடல் மரபன்மையின் துறந்தோர்க் கொத்ததன்று என்றான். நின் அருள்வகை சிறப்புடையதே என்பான் 'நின் சிறந்த அருள்வகை' என்றான். பொருள்வகையாயினும் - செய்யத் தகுந்த காரியங்களின் பொருட்டே ஆயினும்.