பக்கம் எண் :

பக்கம் எண்:665

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
            காரிய மிதுவெனச் சீரிய காட்டி
            அமைச்ச ருரைத்த திகத்த லின்றி
            மணிப்பூண் மார்பன் பணித்தொழி லன்மை
     205    நல்லா சார மல்லது புரிந்த
            கல்லாக் கற்பிற் கயத்தியேன் யானென
            நாண்மீ தூர நடுங்குவன ளெழுந்து
 
                (வாசவதத்தையின் செயல்)
              202 - 207 : காரியம்...........எழுந்து
 
(பொழிப்புரை) உதயணன் முதலியோர் வரவு கண்ட வாசவதத்தை, இஃது இப்பொழுதைக்குச் செய்யவேண்டிய செயல் என்று சிறந்த கருத்துக்களையும் எடுத்துக்காட்டி நல்லமைச்சராகிய யூகியந்தணர் கூறிய நெறியினைக் கடத்தலன்றிச் செய்தேனாயினும் அச்செயல் மணியணிகலன் அணிந்த மார்பினையுடைய என் கணவன் பணித்த செயல் அன்மையாலே ஒரோவழி அங்ஙனம் ஒழுகியது கற்புடை மகளிர்க்குப் பொருந்தும் நல்லொழுக்கமல்லாத தீயொழுக்கமும் ஆகுமோ? ஆயின் யான் நல்லாசாரம் அல்லது புரிந்த கல்லாமையுடைய கயத்தியேனே அல்லெனோ ? என்று எண்ணி நாணம் மிகுதலாலே மெய் நடுங்கி எழுந்து என்க.
 
(விளக்கம்) காரியம் - செய்யத்தக்க செயல். சீரிய - சிறந்த கருத்துகள். நல்லாசாரமல்லது - தீயொழுக்கம். கயத்தி - கயமை யுடையோள்.