பக்கம் எண் :

பக்கம் எண்:668

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           அகல நின்ற செவிலியை நோக்கித்
           துன்பக் காலத்துத் துணையெமக் காகி
     220    இன்ப மீதற் கியைந்துகை விடாது
           பெருமுது தலைமையி னொருமீக் கூரிய
           உயர்தவக் கிழமைநும் முடம்பி னாகிய
           சிற்றுப காரம் வற்றல் ; லா
           தால வித்திற் பெருகி ஞாலத்து
     225    நன்றி யீன்ற தென்றவட் கொத்த
           சலமி லருண்மொழி சாலக் கூறி
 
         (உதயணன் சாங்கியத்தாயை நோக்கிக் கூறல்)
                218 - 226 : அகல.........கூறி
 
(பொழிப்புரை) இச் செவ்வியில் ஒருசார் ஒதுங்கி நின்ற சாங்கியத் தாயை உதயணன் நோக்கிப் பெரிதும் நன்றியுடையனாய், ''பெரியீர் ! நீயிர் எமது துன்பக் காலத்திலே எமக்கின்றியமையாத துணையாகிய அத் துன்பந் தீர்த்து எமக்கு இன்பமீதற் பொருட்டுப் பொருந்தி எந்நிலையினும் கைவிடாமல் நுமது பெரிய முதுமையுடைய தலைமைத் தன்மை பொருந்திய ஒப்பற்ற புகழையுடைய உயர்ந்த தவவொழுக்கத்தையுடைய நும்முடைய உடலாலே பண்டு செய்த சிறியதோர் உதவி குன்றிவிடாமல் இற்றைநாள் ஆலமரத்தின் விதையினின்றும் பெரிய மரம் தோன்றினாற்போலப் பெருகி இவ்வுலகத்தில் எமக்குப் பேரின்பத்தை வழங்கியதுகாண்! நீயிர் ஊழிபல வாழ்க!'' என்று வஞ்சம் சிறிதுமில்லாத தன் அருண்மொழி பலவற்றை அத்தவமூதாட்டி பண்பிற்கேற்ப மொழிந்து என்க.
 
(விளக்கம்) செவிலி : சாங்கியத்தாய். ''உறக்குந் துணையதோர் ஆலம் வித்தீண்டி இறப்ப நிழற் பயந்தாங்கு'' எனவரும் நாலடியை (38) ஈண்டு நினைக. நன்றி - இன்பம். சலம் - வஞ்சம். சால - மிக.