பக்கம் எண் :

பக்கம் எண்:670

உரை
 
4. வத்தவ காண்டம்
 
7. வாசவதத்தை வந்தது
 
           மாணக ருவந்து மழைதொட நிவந்த
           சேணுயர் மாடத்து மீமிசை யெடுத்த
           விரிப்பூங் கொடியொடு விழவயர்ந் தியற்றி
     235    அமைச்ச னாற்றலு நண்பின தமைதியும்
           நயத்தகு நன்னுத லியற்பெரு நிறையும்
           வியத்தன ராகி மதித்தனர் பகரப்
 
                     (இதுவுமது)
            232 - 237 : மாணகர்.............பகர
 
(பொழிப்புரை) பெரிய அக்கோசம்பி நகரத்தேவாழும் மாந்தர்கள் அச் செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்து வான்முகிலைத் தீண்டும்படி மிகவும் உயர்ந்த தத்தம் மாடங்களின் உச்சிமேல் உயர்த்திய விரிந்த அழகிய கொடிகளோடே திருவிழாவியற்றி யூகியினது சூழ்ச்சித்திறத்தையும் அவன் நண்பினது அமைதியையும் எல்லோராலும் விரும்பத்தகுந்த நல்ல நுதலையுடைய வாசவதத்தையின் இயல்பான பெரிய கடவுட் கற்பின் சிறப்பினையும் வியந்து வியந்து நன்கு மதித்துப் பாராட்டிப் புகழாநிற்பவும் நகரத்தே புகுந்து என்க.
 
(விளக்கம்) மாணகர் - கோசம்பி : ஆகுபெயர்; மழை - முகில். முகில் தவழும்படி நிவந்த எனினுமாம். மீமிசை - உச்சிமேல், அமைச்சன் : யூகி, நன்னுதல் : வாசவதத்தை. வியத்தனர் - விகாரம். நகரத்தே புகுந்து என வருவித்துக் கொள்க.